Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Saturday, 22 November 2008

கடிதமோ? உள்ளமோ? -3

தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் தன் புதல்வி லக்ஷ்மிக்கு எழுதிய கடிதங்களும்,

நேருஜி அவர்கள் தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களும் பிரசித்திப் பெற்ற நூல்களாகும்.

அனைவரும் படிக்க வேண்டியவை.

கடிதங்கள் வரலாறுபோல் காலத்தை, நிகழ்வுகளை, வாழ்வியல் நடைமுறைகளை உணர்த்துகின்றன.

"இன்னும் இரண்டே வரி!" என்ற கதை போன்ற செய்தி ராணுவக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் உணர முடியும்.

சிறு வயதில் படித்தது.

போர்ப் பாசறையில், ஆணையை மீறி மெழுகுவர்த்தி ஒளியில்

போர் வீரன் ஒருவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்...

அருகில் ஒரு குரல் "இன்னும் இரண்டு வரி!" எழுது!

"இக்கடிதம் உன்கைக்கு வரும்போது நான் பிணமாகியிருப்பேன்!"

திரும்பவும் திரைக் காட்சியில், கடிதங்கள் பற்றி நிறைய அறியக் கிடைக்கின்றன!

"கிழக்கே போகும் ரயில்" திரைப் படத்தில், காதலர் பரிமாறிக் கொள்ளும் கடிதம்...

ரயிலின் பின்பக்கம்! பாரதிராஜாவின் புதுமைக் கற்பனை!

"குணா" திரைப் படத்தில், காதலன் வசனமாகச் சொல்வதை அழகிய கவிதையாய், காதலி எழுதிப் பாடலாய்ப் பாடுவது கேட்டு ரசிக்கலாம்!

இன்று ஈ-மெயில், எஸ் எம் எஸ் மூலமாக எல்லாவித பரிமாணத்திலும் கடிதங்கள்
அதி துரிதமாகச் செயல் படுகின்றன!

என்ன இருந்தாலும் கைப்பட எழுதும் சொந்தங்களின், நட்புகளின் கடிதங்களுக்கு இணை சொல்ல முடியுமா?

தங்கமணி

Monday, 17 November 2008

கடிதமோ ? உள்ளமோ ? - 2

"லெட்டர் மாமா" ன்னு அழைக்கும் "மல்லி" குறும்படம் "மக்கள்' தொலைக்காட்சியில் கண்டேன்!

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

அன்றிலிருந்து இன்றுவரை...

கடிதத்திற்கு வாழ்வில் முக்கிய இடம் உண்டு!

ஓலை, லிகிதம், மடல் என்று பல பெயர்கள் கடிதத்திற்கு உண்டு!

அரசன் தன் பெண்ணை மணம் செய்ய வேண்டிக் கேட்ட சிற்றரசனுக்கு தூதுவனிடம் "செல் அறித்த ஓலை செல்லுமோ?" என்று மேலும் கூறி மறுத்ததை கேட்டிருக்கிறோம்!

"சுகுமாரா! என் தாபம் தனைநீ அறியாயோ? மாரா!" என்று சகுந்தலை கடிதம் (பாடல்) தாமரை இலையில் எழுதுவதை படத்தில் கண்டு அறிவோம்!

கிளிக்கண்ணியில் "மாலை வடிவேலவர்க்கு ஓலை கிறுக்காச்சுதே! உள்ளமும் கிறுக்காச்சுதே!" என்னும் பாடல் கவிதை இலக்கியமாய் வளர்ந்தது!

"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!" என்ற பாடலும்,

" அதிகாலை, சுபவேளை, ஒரு ஓலை வந்தது!
ஒரு தத்தை, கடிதத்தை, தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க"

அன்புள்ள மான் விழியே! ஆசையில் ஓர் கடிதம்"

இப்படி நிறைய பாடல்கள் கடிதத்தைப் பற்றி சினிமாப் பாடலில் காண்கின்றன!

(தொடரும் ..)

Tuesday, 11 November 2008

கடிதமோ? உள்ளமோ?

"நான் அனுப்புவது கடிதம் அல்ல! உள்ளம்!" என்று கவிஞர் கூறுவது உண்மையே!

இளம் தம்பதியரும்,பெற்றோர் பிள்ளைகளும் பிரிந்து வாழும்போது பாலமாக அவர்களின் உணர்வுகளை இணைப்பது கடிதம்தானே?

கடிதங்களைக் கொணர்ந்து கொடுக்கும் தபால் ஊழியர் இவர்களுக்குத் தெய்வமாகத் தோன்றுவது வியப்பில்லையன்றோ?

தபால் ஊழியர் தொழில் உன்னதமான சேவையாகும்.

அவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் மக்களுடன் உறவாக வாழ்வதே சிறப்பாகும்.

வெய்யிலில் அலைந்து, கிராமங்களில் மக்களுக்கு மணியார்டர் மூலம் பணம் பட்டுவாடா செய்தல், கடிதங்களை கொடுப்பதுடன், படித்து விளக்கம் சொல்லுதல் போன்ற உதவிகளையும் செய்வர்.

சிலர், தபாலூழியரை மோர், தண்ணீர் கொடுத்து உபசரிக்கும் பண்புடையவராக இருப்பர்.

கார்டு, கவர், இன்லன்ட் லெட்டர், ஏர்மெயில் போன்றவைகள் கடிதம் எழுத உபயோகத்தில் இருந்தன.

"தந்தி" என்பது சாவு போன்ற செய்திகளுக்கென்று நினைத்து பயப்படும் மக்கள் உண்டு.

திருமண வாழ்த்துப் போன்றவற்றிற்கும் "தந்தி" உபயோகத்தில் இருந்தது.

எங்கள் கிராமத்தில் காலை எட்டு மணிக்கு தபால் அலுவலகம் முன்பு மக்கள் கூடி அங்கேயே தபாலைப் பெற்றுச் செல்வதுமுண்டு.

வேலை கிடைக்க, காலேஜ் ஸீட் கிடைக்க, பிள்ளையிடமிருந்து (மணியார்டர் கிடைக்க, பணமோ, அவன் வரவைக் குறித்தோ, கணவனிடமிருந்து கடிதம் பெற என்று பலப்பல எதிர்பார்ப்பில், தபால்காரர் பணி முக்கியம் வாய்ந்தது.


கடிதம் எழுதத் தெரியாதத் தாய்மார்களுக்கு, அவர்கள் சொல்லுவது போலவே எழுதி உதவி செய்யணும்.

பேச்சுவழக்கில் மண் மணம் கமழ எதிரிலே இருப்பது போல் சொல்லுவார்கள்.

அதே கருத்தை அப்படியே கடிதத்தில் கொணர்ந்து நாம் எழுதுவதோடு மட்டுமல்ல!

படித்தும் காட்ட வேண்டும்.

(தொடரும்...)

அன்புடன்,
தங்கமணி.