Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

Tuesday, 2 March 2010

கண்ணன் குழல் அமுதம்-- 2.

கண்ணன் வேய்ங்குழல் ஊதற்சிறப்பு!
=================================

கண்ணனின் குழலிசை அமுதப் பிரவாகமாய் வழிகிறது!

உயிரினங்கள் எல்லாம் அந்த இசையில் கட்டுண்டு எப்படியெல்லாம் காட்சி அளிக்கின்றன!

பறவைகள் தன் கூடுதுறந்து தரையின்மீது கிடக்கின்றன ! கறவைகள் கால்பரப்பி, தலை தாழ்ந்து செவியாட்டாமல் அப்படியே நிற்கின்றன!

மருண்டமான்கள் மேய்தலை மறந்து,வாயிலுள்ள புல் கடைவாய் வழியாய் வெளியே நழுவும்படியாகத் தன்னை மறந்து, இருக்கும் நிலை, வரைந்த ஓவியங்களாய் அசையாதச் சித்திரங்களாய்க் காண்கின்றன!

என்னென்பது குழல்வழி அமுதகீதம்! யாதவக்கண்ணனின் கருணைநிறைந்த லீலையன்றோ?

குழலிசையில் உயிரினங்கள் எல்லாம் தன்நிலை மறந்து இருக்கும்போது மனிதராகிய நாம் எம்மாத்திரம்?

வண்டினம் சூழ்ந்த தாமரை போல சுருண்டுருண்ட குழல் சூழ்ந்த முகமலரோன், முகில்வண்ணன் சிறு வியர்வைத் துளிர்க்கும்படியான புருவங்கள் கூட, சிவந்த கண்கள் செருக
குழலின் துளைகளைச் சிறுவிரல்களால் தடவி குழலூதும் போது, குவியும் செவ்விதழின் அழகு போன்ற அற்புதக் காட்சிகளும், உயிரினங்களின் தன்னை மறந்த நிலைகளும் எழுதியச் சித்திரமாய்ப் படைத்து நமக்கு அளித்த பெரியாழ்வார் அனுபவித்ததை நமக்குப் பாடல்களாக
அளித்து அருளிச்செய்துள்ளார்!

நாம் இப்பாடல்களைப் படித்து உணர்ந்து, அனுபவித்து உய்வோமாக!

பாடல்கள் இதோ:

சிறுவிரல் கள் தடவிப் பறிமாறச்
..செங்கண் கோடச் செய்ய வாய்க்கொப் பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக்
..கோவிந்தன் குழல் கொடூதி யபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
..வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்ப ரப்பிட்டுக்
..கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே!

திரண்டெ ழுதழை மழைமுகில் வண்னன்
..செங்க மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்
..ஊது கின்ற குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து
..மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
..எழுதுசித் திரங்கள் போல நின்றனவே !

Friday, 26 February 2010

கண்ணன் குழல் அமுதம்!

இப்பாடலை ஒருதரம் படித்தேன்.

அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்!

நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை
மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார்.

கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! "செம்பெருந்தடங்கண்ணன்!"

அவர் பார்வை தோளழகில் விழுகிறது!

கம்பன் சொன்னானே! "தோள் கண்டார் தோளேகண்டார்!" என்பது போல பெரியாழ்வர் "திரள் தோளன்" என்று கண்ணனின் புஜ பல பராக்கிரமத்தைப் பேசுகிறார்!

யசோதையின் மழலையாய், வளர்ந்து, பல அற்புதங்களை கோகுலத்தில் நிகழ்த்தி யாவர்
மனத்தையும் கொள்ளைக் கொண்ட யாதவச் சிறுவன்.

யசோதையும், பரந்தாமனைக் கொஞ்சி, குலவி, மிரட்டி, கயிற்றில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்து, இன்னும் இன்னும் நிறைய அவனைக் கொண்டாடியிருக்கிறாள் !

பாவம் ! தேவகி!

கண்ணனின் விளையாடல்களைப் பக்கத்தில் இருந்து அனுபவித்தவளில்லை!

தேவகியின் மணிவயிற்றில் உதித்த பிள்ளையல்லவா?

பெரியாழ்வார் சொல்கிறார் "தேவகி சிறுவன் ...."

இன்னும் சொல்கிறார் 'தேவர்கள் சிங்கம்"

ஆம். நரசிம்மமாய் அவதரித்து, இரண்யனைக் கொன்று, பிரஹ்லாதனுக்கு அருளிய
"நரசிங்கமல்லவா அவன்!

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போவதில் மனம் திருப்தி அடையவில்லையாம்!

"நம் பரமன்" அப்பாடா!

இப்பொழுது பெரியாழ்வாருக்கு உவகைப் பெருகுகிறது!

ஆமாம்...கண்ணனின் குழலூதும் அழகைப் பருக வந்துவிட்டு, அவனழகில் உருகி நின்றால் எப்படி?

வாருங்கள்! பெரியாழ்வார் கூறுகிறார்! கேட்போம்:

கண்ணனின் குழலிசைக் கேட்டவரெல்லாம் தவித்தனர்!

அமுத மய கீதமென்னும் கீத வலையில் சிக்குண்டு, வானவெளியில் இயங்கும்
கந்தர்வர்கள், மயங்கி நிலைகுலைந்தனராம்!

கந்தருவர் என்ன? நாமும் அந்த குழலிசை மயக்கத்தில் இருக்கிறோம்!

பெரியாழ்வார் திருமொழி.
====================

கண்ணன் வேய்ங்குழலூதற் சிறப்பு.

செம்பெருந் தடங்கண் ணன் திரள் தோளன்
..தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன் இந் நாள்குழ லூதக்
...கேட்ட வர்கள் இடருற் ரன கேளீர்
அம்பரந் திரியும் காந்தப் பரெல்லாம்
...அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி
...நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே.

Saturday, 5 December 2009

கண்ணன் என் தம்பி! -- 3

சேலம் ராமகிருஷ்ண மடத்தையும், மடத்துச் சான்றோர்களையும் காண மிகவும் ஆவலாக இருந்தான்!

கண்ணனின் எண்ணம் நிறைவேறியதா?

ராஜு! எங்கள் (சித்தப்பா மகன்) தம்பி வந்தான். சேலம் செல்ல ஏற்பாடு செய்தான்!

ஒரு வேனில், கண்ணனை சிலர் (கை உருளையோடு) ஏற்றினார்கள். ராஜு கண்ணனுடன் சென்று அவனுக்கு உதவியாக இருந்தான்!

கண்ணன் மனம் மகிழ அங்குள்ளப் பெரியோரைச் சந்தித்தது, அங்கு நடந்த பூஜையில் கலந்துகொண்டது(எல்லாம் உருளையுடன் நகர்ந்து...நகர்ந்தே..)

இன்னும் சொல்லியிருப்பான்! எனக்கு நினைவில்லை!

இப்படியே ஒன்பது வருடங்கள் உருண்டது! உடல் நலமின்றி, ஆகாரம் செல்லவில்லை!

டாக்டரும் வந்தார்! மருந்துகள் கொடுத்தார்! ஒன்றும் பலனில்லை!

மூச்சுத் திணறல் வந்தது!

அக்கம் பக்கம் சொந்தக்காரர்கள் வந்து பார்த்துச் சென்றனர்!

இதற்குள் ராஜு, சேலம் மடத்திலிருந்து பிரசாதம் வாங்கி வந்தான்!

மூன்றாவது அண்ணாவின் மடியிலேயே... இரவு சென்றது...

மூச்சுத் திணறல்....

பக்கத்து வீட்டுப் பெரியப்பா சொல்கிறார்: 'நாங்கள்ளாம் அஞ்ஞானிகள்! நீ ஞானஸ்தன்! ஒனக்கு சொல்றதுக்கு என்னப்பா இருக்கு! நாராயணா ங்கற நாமத்தை கெட்டியாப் பிடிச்சுக்கோ!'

கண்ணன் சந்நியாஸம் வாங்கிண்டான்!

தபால் மூலமாக...(விவரம் சொல்லலை) குரு பாயின் புனித காவி வஸ்திரத் துளி(பிட்)

அதை மூச்சுக்குக்கும், இதயத்துக்கும் வைத்துக் கொண்டான்.

அதுவும் முடியலை! மூச்சு வாங்கறது!

விரல்கள் ஜப மாலையை தேடுவதுபோல் தோன்றியது!

ராமகிருஷ்ணர் படத்தை அவன் கண் முன்னாலே காட்டிண்டு, 'ஓம் ராமகிருஷ்ணா! ஓம் ராமகிருஷ்ணா!' ந்னு நான் பலமா சொல்ரேன்!

பக்கத்து வீட்டு சந்துரு அண்ணா அப்படியே கரம் கூப்பிண்டிருக்கின்றார்!

கண்ணன் விடுதலைப் பெற்று விட்டான்!

ராமகிருஷ்ணர் பதம் சேர்ந்தான்!

அப்போது அவனுக்குவயது இருபத்தியேழு!

நிறைவுற்றது.



--------------------------------------------------

கண்ணன்(சிவாம்ருதம்) தமிழில் கவிதைகளும், கீர்த்தனைகளும் இயற்றியுள்ளான்.

அவற்றிலிருந்து...

கீர்த்தனை--- 1
====================

ராகம் திலங். தாளம் ஆதி.

பல்லவி
=======

நம்பினேன் அருள்செய் நாயகனே!உன்பால்
நாளும் பக்திஓங்க நீளும் பிறவி நீங்க(நம்பி)

அனுபல்லவி
==========

அம்பிகை ஸ்ரிபவ தாரிணி பாலா!
அன்னை சாரதையின் ஆருயிர் மணவாளா!(நம்பி)

சரணம்
======

வஞ்சப் புலனைந்தைக் கொஞ்சமும் நம்பிடேன்!
..வந்த உலகை எந்தன் சொந்தமாய் நம்பிடேன்!
தஞ்சமென் ருன்மலர்த் தாளையே நம்பினேன்!
..தாமதம் செய்யாதே! ராமக்ருஷ்ண தேவாஉனை(நம்பி)
--------------

கீர்த்தனை--- 2
====================

ராகம் சரஸ்வதி தாளம் ரூபகம்.

பல்லவி
========

பகவானைப் பணி மனமே!
பரமஹம்ஸ ராமகிருஷ்ண (பக)

அனுபல்லவி
===========

சுகவாழ் வுற்றிடவே சத்
..சிதானந்த ஸ்வரூபனை (பக)

சரணம்
========

தூய அன்னை நேயனைஅன்பர்த்
..துயர் நீக்கும்ச காயனை
மாயனை குரு மஹராஜனை
..மஹாதேவ கதாதரனை (பக)
-------------


பகவான் ராமகிருஷ்ணருக்கு, மலர்களால் அருச்சனை!
---------------------------------------------------

வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!

தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!

----------------

Friday, 4 December 2009

கண்ணன் என் தம்பி! - 2

பெற்றோர் கண்ணனுக்கு வைத்த பெயர் சிவாம்ருதம்.

அப்பா அப்படித்தான் கூப்பிடுவார்!

பள்ளியில் கொடுத்த பெயர் சிவாம்ருதம்.

நாங்கள்தான் கண்ணா! கண்ணா! என்று கூப்பிடுவோம்!

நிறைய புத்தகங்கள் மூலமாக, விவேகானந்தரையும், ராமகிருஷ்ண பரமஹம்ஸரையும் அறிந்து கொள்ள முயன்றான்.

ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் (குரு பாயிக்கள்) துரியானந்தர், லாடு போன்றோர் வரலாற்றையும் படித்தான்.

"காஸ்பெல் ஆப் ராமகிருஷ்ணா" புத்தகம் படிக்க ரொம்ப விரும்பினான்.

அவன் ஆர்வம் பலித்தது! விலைக்கு வாங்கப் பட்டது!

ராமாயணப் பலகையில் வைத்து படித்து வந்தான்.

ஆன்மீக விஷயமாக வரும் சந்தேகங்களை, பேலுர் மடத் துறவிகள், அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மடத் துறவிகளிடம் கடிதம் எழுதித் தெளிவித்துக் கொள்வான்.

தபாலுக்காகக் காத்திருப்பதில் ஒரு மகிழ்ச்சி அடைவான்!

வீட்டில் ராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி போன்ற சஞ்சிகைகள் தருவிக்கப் பட்டன.

சேலம் மடத்துடன், கடிதப் போக்குவரவு வைத்திருந்தான்.

"சகோதரி நிவேதிதா" மீது பாடல் எழுதி கல்கிக்கு அனுப்பினான்.

அது வெளிவந்தது! 30, அல்லது 50 ரூபாய் கிடைத்தது !

ராமகிருஷ்ணரின் உருவப் படத்திற்கு, எவர்சில்வர் பிரேம் போட்டு வைத்துக் கொண்டான்!

திரு.ரா.கணபதி அவர்கள் "அறிவுக்கனலே! அருட்புனலே!"

முதல் பதிப்பு -வருடம் 1965. விலை -ரூ.12. கலைமகள் காரியாலயம்.

ராஷ்ட்டிரபதி எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டு கௌரவித்தது.


மேற்சொல்லப்பட்ட புத்தகத்தை, திரு.ரா.கணபதி அவர்கள் தம் கைப்பட சிவாம்ருதத்தின் நலம் விழைந்து,

"குருமஹராஜின் கிருபையால் ச்ரி. சிவாம்ருதத்திற்கு ஆன்ம நலன், உடல் நலன் இரண்டும் கிட்ட வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

ரா.கணபதி."

என்று எழுதி புத்தகத்தை அளித்துள்ளார்.


பகவான் ராமகிருஷ்ணர், சாரதாமணி தேவி, விவேகானந்தர் இவர்களின் பிறந்த தினம் அன்று, துதிப்பாடலுடன், இனிப்பு (தேங்காய் பர்பி) செய்து வணங்குவோம்!

தமிழில் கவிதைகள், கீர்த்தனைகள் இயற்றினான்.

அவனுக்கு எழுத முடியாத போது நாங்களும் உதவியாக எழுதுவோம்

சம்ஸ்க்ருதமும் அவனாகக் கற்றுக் கொண்டு "பகவத் கீதை" படிக்கலானான்.

சேலம் ராமகிருஷ்ணா மடம் சென்று பார்க்க ஆசைப் பட்டான்.

இன்னும் வரும்....

Thursday, 3 December 2009

கண்ணன் என் தம்பி! - 1

சின்ன வயதில் கண்ணன் வீடே தங்க மாட்டான்!

விளையாட்டுத்தான் அவனுக்கு எப்போதும்!

அவனுடன், ராஜுவும் (எங்கள் சித்தப்பா மகன்) சேர்ந்தால் கொண்டாட்டம்தான்! ரெண்டு பேரும் ஏறக்குறைய ஒரே வயதினர்!

கோவிலில் திருவிழா என்றால், இவர்கள் அங்கே வேடிக்கைப் பார்க்கச் சென்று விடுவார்கள்!

மாரியம்மன் மஹமேருவில் (புஷ்பப் பல்லக்கில்) ஊர்வலம்! அதுக்கு பூக்களெல்லாம் அலங்கரிக்கிப்பதைப் பார்ப்பது ஒரு வேடிக்கை!

வேலை செய்யும் கலைஞர்களுக்கு ஏதாவது சின்ன உதவிகள் செய்வார்கள்!

இரவு வீட்டிற்கு வரும்போது பயத்தோடு வீட்டினுள் நுழைவார்கள். ஏனென்றால்,அப்பா கோவத்தோட கத்துவார்! படிக்காம, சாப்பிடாமே ஊர் சுத்துகிறார்களே என்று அக்கறை!

கண்ணன் ரொம்பக் கோவக்காரன்! அவன் கேட்டது கிடைக்கலேன்னா ஒரே ரகளைதான்!

அடிக்கடி கால்வலின்னு சொல்வான்!

அப்பா மேலே கால் போட்டுண்டு படுத்துப்பான்! அப்பா அவன் காலைப் பிடித்து விடுவார்!

படிப்பில் சூடிகையா இருந்தான்!

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, பத்தாம் வகுப்பு முழு பரீட்சை முடிஞ்சு...லீவு! நீண்ட விடுமுறை!

இன்னொன்று சொல்ல மறந்தேனே!

அவனுக்கு ஏசிசி யில்சேர ஆர்வம்!(என்.சி.சி மாதிரி)

அதுக்கு காக்கி சீருடை, ஷூ,தொப்பி எல்லாம் வாங்கணும்!
அப்பா காசு கஷ்டம்! முடியாதுங்கறார்!

ரெண்டாவது அண்ணாகிட்ட கேட்டு வெச்சிருக்கான். அவரும் சரீன்னுட்டார்! வாங்கி கொடுத்தாரே! ஆசையோடு தொப்பியைப் போட்டுப் பார்த்து மகிழ்ந்தானே!

ஆனா விதியோட விளையாட்டை என்னன்னு சொல்றது?

கடுமையானக் காய்ச்சல்! நாலு நாளா வாட்டறது!

உடம்பை அசைச்சால் வலீன்னு கத்தறான்! இன்ச் கூட நகர முடியலை!

டாக்டர் வீட்டுக்கே வந்து பார்த்தார்! காய்ச்சல் கொறஞ்சிது!

ஆனா நேரா நடக்க முடியல்லே! ஒரு கோல்(தடி)பிடித்து நடக்க முயன்றான்.

அந்த சமயம் என் கல்யாணம்! வீட்டிலேயே! (திருமண மண்டபம்கிடையாது)

இந்த நிலையில்,நான் புகுந்த வீடு சென்றேன்!

என் அம்மாவும், தங்கைகள் ரெண்டுபேரும், அவனைக் கவனித்துக் கொண்டனர்!

கண்ணனுக்கு சுத்தமா நடையே வரவில்லை!

கால்கள் இரண்டும் முடக்கி விட்டது!

படுக்கும் போது கூட,கால்கள் முடங்கியே தான் இருக்கும்!

கால்களை நீட்ட முடியாது! கைகளில் வலது கை டனா அளவுக்கு வரும்.

"வாயோடு குந்தாணி" தெரியும்தானே?

அதுதான் அவனுக்கு நகர்ந்து செல்ல உதவியாக இருந்தது!
அதை வலது கையால் உருட்டிண்டு வருவான்! மற்ற எல்லா வேலையும் இடது கையில்தான்!

அவன் எழுந்து உருளையை உருட்டிண்டு, தொட்டி முத்தத்திலே, பல் தேய்ச்சுண்டு, காலைக் கடன் எல்லாம் முடிச்சிப்பான்!

அம்மா கவனிச்சுப்பார். சகோதரிகளும் கவனித்துக் கொள்வர்.

அவனுக்காக வீட்டில்'ரேடியோ'வாங்கினார்கள். அப்போ வானொலி சஞ்சிகை மாதா மாதம் வெளிவரும். அதில்,பாடல் பயிற்சியில் பாட்டும், ச்வரமும், ராகமும் எழுதி யிருக்கும்!

தாளம் "அரை எடுப்புத் தள்ளி" ந்னு இருக்கும். சரியாப் பாடிடுவான்!

தாளங்களை ரசிச்சுக் கேப்பான்!

கச்சேரிப் பாடல் நடக்கும் போது, அதுக்கு சரியாக் கொன்னக் கோல் சொல்லுவான்!

இன்னும் வரும்....