
என் குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கையில் தாரமங்கலமென்ற கிராமத்தைப் பற்றியும் அதன் 1970 களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுத வெண்டியதாகிறது.
எனக்குத் தெரிந்த 'தாரை மா நகர்' என்பது ஒரு சிறிய கிராமம்.
வயல் வெளிகளும் தென்னைத் தோப்புகளும் நிறைந்த பசுமையான இடங்களைத் தவிர சிறிதும் பெரிதுமான சில நூறு வீடுகளையும் ஒரு பெரிய கோவிலையும் மையத்தில் கொண்ட ஒரு அழகான கிராமம்.
(3 டாக்டர்களும் 2 மருந்து கடைகளும் 3 பள்ளிக் கூடங்களும் ஒரு சினிமா கொட்டகையும் கிராம வாழ்க்கையின் அடையாள நிதர்சனங்கள்.)
ஸன்னதி தெரு, அக்ரஹாரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே எங்கள் வீடு.
எனது 17 வருட வாழ்க்கையிலேயே அந்த வீட்டில் நிறைய மாற்றங்கள்.
மூன்று தென்னை மரங்கள் தேன் கூட்டைக் கலைக்க வைத்த நெருப்பு சாகஸத்தில் இரண்டானது;
முதலியாருக்கு வீட்டின் முன் பகுதியை விற்றபின் வெங்கு மாமாவின் கடையடைத்தது,
பிறகு விற்ற பகுதிக்கு அடையாளமாக எழுப்ப பட்ட என் இடுப்புயர சுவற்றின் மீது நடந்து போன நாட்கள்...
பின் மழை பெய்து மண் கரைந்து போய் அந்த சுவர் என் காலுயரமானது...
நினைத்துப் பார்க்கையில் மழையினாலா அல்லது நான் உயரமானதாலா என்ற குழப்பம் இப்போது.
தென்னை மரங்களுடன் படர்ந்து வளர்ந்த ஒரு வாத நாராயண மரமும் அதில் வசித்த ஒரு 'ஒடக்காண்' குடும்பமும் என் மனதில் இன்றும் பசுமையாக.
(ஓணான் என்றால் 'ஒட்டகம் ஓணான் ஔவையார்' என்பது போல் நல்ல தமிழ் வார்த்தையாகிவிடும். எங்கள் தாரமங்கல தமிழில் அது என்றும் 'ஒடக்காண்' தான்!)
சின்ன வயதில் அந்த ஒடக்காணுடன் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறேன்;
என் சந்தோஷங்களை, என் தோல்விகளை, என் எண்ணங்களையும் ஆசைகளையும் என் பயங்களையும் கிலேசங்களையும் ....
இப்படி எது நான் சொன்னாலும் பொறுமையாக நின்ற இடம் நகராமல் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் அது!
என் 4 வயதில் பள்ளி ஆரம்பித்த நாட்களில், டீச்சரிடம் திட்டு வாங்கினாலோ, நண்பனிடம் சண்டை போட்டாலோ, மணி படுத்தினாலோ, உஷாவிடம் தகறாரென்றாலோ...
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு ஆமோதிக்க நல்ல ஒரு கௌன்ஸில்லர், தெரபிஸ்ட் அந்த ஒடக்காண்!
பாட்டுப் போட்டிக்கு தயார் செய்யவெண்டுமானால், ஓடு தோட்டத்துக்கு!
நல்ல மழையில் வருமே ஒரு 'மெலன்கொலி'- மனக்கிலேசமா...(அது ஒழுகும் கூரையாலா அல்லது மழை வந்தவுடன் தாத்தாவுக்கு பிடிக்கும் 'தண்ணீ பூதத்' தினாலா? அல்லது வெளியில் ஓடியாடி விளையாட முடியாதாலா?) ஒடு வாசலுக்கு..
சொட்டும் மழையில் குளிர்ச் சிலிர்ப்புடன் அந்த ஒடக்காண்.
சில வேளையில் பள்ளியிலிருந்து வீடு வந்தால் காணாமல் போய் விடும் ஒடக்காணைத் தேடி மரம் மரமாய் பார்வையை ஒட்டினால்,
மிகச் சிறந்த 'கேமோFலாஜ் ஆர்டிஸ்டாய்' கண் முன்னாலேயே மறைந்திருக்கும் அந்த நண்பனைப் பார்த்ததும் தான் நிம்மதி வரும்!
பின்னாளில் பாரதியின் கயிற்றைப் பற்றிய வசனக் கவிதையைப் புரிந்து கொள்ள முற்படுகையில் அவரது கற்பனை எனது ஐந்து ஆறு வயதுக்கான 'ஒடக்காண்' கற்பனையை நினைவூட்டியது.
- திப்பிலி.