Friday 26 February, 2010

கண்ணன் குழல் அமுதம்!

இப்பாடலை ஒருதரம் படித்தேன்.

அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்!

நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை
மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார்.

கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! "செம்பெருந்தடங்கண்ணன்!"

அவர் பார்வை தோளழகில் விழுகிறது!

கம்பன் சொன்னானே! "தோள் கண்டார் தோளேகண்டார்!" என்பது போல பெரியாழ்வர் "திரள் தோளன்" என்று கண்ணனின் புஜ பல பராக்கிரமத்தைப் பேசுகிறார்!

யசோதையின் மழலையாய், வளர்ந்து, பல அற்புதங்களை கோகுலத்தில் நிகழ்த்தி யாவர்
மனத்தையும் கொள்ளைக் கொண்ட யாதவச் சிறுவன்.

யசோதையும், பரந்தாமனைக் கொஞ்சி, குலவி, மிரட்டி, கயிற்றில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்து, இன்னும் இன்னும் நிறைய அவனைக் கொண்டாடியிருக்கிறாள் !

பாவம் ! தேவகி!

கண்ணனின் விளையாடல்களைப் பக்கத்தில் இருந்து அனுபவித்தவளில்லை!

தேவகியின் மணிவயிற்றில் உதித்த பிள்ளையல்லவா?

பெரியாழ்வார் சொல்கிறார் "தேவகி சிறுவன் ...."

இன்னும் சொல்கிறார் 'தேவர்கள் சிங்கம்"

ஆம். நரசிம்மமாய் அவதரித்து, இரண்யனைக் கொன்று, பிரஹ்லாதனுக்கு அருளிய
"நரசிங்கமல்லவா அவன்!

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போவதில் மனம் திருப்தி அடையவில்லையாம்!

"நம் பரமன்" அப்பாடா!

இப்பொழுது பெரியாழ்வாருக்கு உவகைப் பெருகுகிறது!

ஆமாம்...கண்ணனின் குழலூதும் அழகைப் பருக வந்துவிட்டு, அவனழகில் உருகி நின்றால் எப்படி?

வாருங்கள்! பெரியாழ்வார் கூறுகிறார்! கேட்போம்:

கண்ணனின் குழலிசைக் கேட்டவரெல்லாம் தவித்தனர்!

அமுத மய கீதமென்னும் கீத வலையில் சிக்குண்டு, வானவெளியில் இயங்கும்
கந்தர்வர்கள், மயங்கி நிலைகுலைந்தனராம்!

கந்தருவர் என்ன? நாமும் அந்த குழலிசை மயக்கத்தில் இருக்கிறோம்!

பெரியாழ்வார் திருமொழி.
====================

கண்ணன் வேய்ங்குழலூதற் சிறப்பு.

செம்பெருந் தடங்கண் ணன் திரள் தோளன்
..தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன் இந் நாள்குழ லூதக்
...கேட்ட வர்கள் இடருற் ரன கேளீர்
அம்பரந் திரியும் காந்தப் பரெல்லாம்
...அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி
...நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே.

Tuesday 2 February, 2010

"டஸன் டெக்கான்!"

உஷாவுக்கு அப்போது ஆறுவயதுன்னு நினைக்கிறேன்!
சின்னவன் திலீபுக்கு மூன்றுவயது!
ஒருதடவை என் நாத்தனார் பிள்ளை எங்கவீட்டுக்கு
வந்திருந்தான்.கையில் இருந்த சாக்லெட் டப்பாவை
திலீபுவிடம் கொடுத்தான்.
குழந்தை என்னிடம் கொடுத்தான்!நான் அதை அறையில்,
பலகை மேலே வைத்து விட்டேன்!
ஊர்விஷயங்களெல்லாம் பேசினோம்,அந்தப்
பிள்ளை குளித்து விட்டு, உணவருந்தி விட்டு,
கூடத்தில் பாயில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு
அப்படியே உறங்கிப் போனான்!
அன்று இரவே ஊருக்குக் கிளம்பி விட்டான்!
அந்த சாக்லெட் டப்பா நினைவு வந்தது!
பாவம்! குழந்தைகள்! ஆசையாகச் சாக்லெட் தின்ன
காத்திண்டிருக்குமே!...ன்னு தோன்றியது!
உள்ளே போனால்...!!
அங்கே திலீப்'ஓ'வென்று அழறான்!
அதற்குள் உஷாவே வேகமாக என்னிடம் வந்து,
"அம்மா! சாக்லெட் திங்கணும் .னு ரொம்ப
ஆசையா இருந்துதும்மா!
நீயும் தரமாட்டேங்கறே!
அதான் நான் ஒரு சாக்லெட் திங்கப்
போகும்போது
இவன் வந்துட்டான்!இவனுக்கும் தந்தேன்மா!"

இப்பொ திலீப்,
"அம்மா!இவோ சாக்லெட்டை கல்லாலே ஒடச்சு ஒடச்சு
எனக்குக் கொஞ்சூன்டு! அவளுக்கு நெறயா எடுத்துக்கறா அம்மா!
ஓவென்று ஒரே அழுகை!
(பெரியவன் குமார் சாது!சமத்து!இந்த வம்புக்கே வரவில்லை!)

'அழாதெடாக் கண்ணு!!உஷா!டப்பாவைக் கொண்டா!
உஷா சாக்லெட் டப்பாவை என்னிடம் கொடுக்கின்றாள்1
திறந்து பார்த்தேன்!
கணிசமாக் கொறஞ்சு இருந்தது!
எவ்வளவு சாக்லெட் தின்றீர்கள் ரெண்டு பேரும்?
உஷா சொல்றா:அங்கே பக்கத்துல இருக்கிற ஸ்டூல இழுத்துண்டு வந்து,மேலே
அங்கே சுவரோரமா மரப் பெட்டி ஒன்று இருக்கும்!
"அம்மா! டெக்கான்(சாக்லெட் பேரு!)சாக்லெட்டுலே
சுத்தியிருந்த பேபர்லாம் இங்கதான் போட்டேன்மா!"இது உஷா.
மரப்பொட்டி சந்துல பன்னிரெண்டு சாக்லெட் பேபர் கிடந்தன!
பசங்களுக்குத் தெரிஞ்சி
அதுக்கப்புறம் உஷாவை "டஸன் டெக்கான்!"என்று கிண்டலடிக்க,
அவள் அழ ஒரே அமர்க்களம்தான்!

ஆனால்,பாவம் உஷா! டெக்கான்சாக்லெட்டை எடுக்க,
ஒவ்வொரு தடவையும் ஸ்டூல் மேல ஏறி,
டப்பாலேர்ந்து ஒருசாக்லெட் எடுத்து
கீழே இறங்கி(கூடவே திலீப் தயாரா இருப்பான்!)
முழுசு முழுசா ஆளுக்கொரு சாக்லெட்டுன்னு
திங்கத் தெரியலையே!
இதுல சத்தமில்லாம சாக்லெட்ட
கல்லுல ஒடைக்கிற கஷ்டம் வேற!
ஒடச்சு ஒடச்சே கஷ்டப் பட்டே 12 டெக்கான் சாக்லெட்டும்
தின்ற ரெண்டு குழந்தைகளின் பேதமையும்
மனசுக்கு வருத்தமா இருந்தது!
பகிர்ந்து தின்னும் குணம் பாராட்ட வேண்டும்!
உஷாவைப் ஒரு விஷயத்துக்குப் பாராட்டனும்!
அவளுக்கு எது திங்கக் கிடைத்தாலும்
எங்க எல்லாருக்கும் கொடுத்துத் தானும் தின்பாள்!
நல்லகுணம்!