Sunday 25 January, 2009

அந்த கருப்பு வெள்ளி !

January 23, 2004...

"அந்த நாளும் வந்திடாதோ "..

எத்தனையோ நாட்களுக்காக , கணங்களுக்காக ஏங்கியதுண்டு..

ஆனால்.. இந்த நாள்..

இன்று நினைத்தாலும்.. உள்ளமும் உடலும் நடுங்கும் நாள்..

ஏன் வந்தது என்று எண்ணி மருகும் ஒரு நாள்..

"வாசலிலே மாக்கோலம்.. வீட்டினிலே லக்ஷ்மிகரம்" என ஊரெங்கும் தை வெள்ளி கொண்டாட்டம் ஒருபுறம்..

புதிதாக கட்டிய அந்த திருமண மண்டபத்தின் முதல் முகூர்த்தம் நெருங்கும் நேரம்..காலை 9.15 மணி..

எங்கும் சந்தோஷ சிரிப்பு, உபசாரம், விசாரிப்புகள்..குதூகலம் உச்சத்தில் இருந்த நேரம்..

வாழ்த்த வந்த முதியோர்கள், விளையாடி திரிந்த மழலை பட்டாளங்கள் ,

களையாய் வளைய வந்த கன்னிகள், பட்டு புடவைகள் சரசரக்க வளையல் சத்தம் மெட்டுபோட..

என எங்கும் சொல்லொன்னா மகிழ்ச்சி வெள்ளம்..

வாத்திய கோஷம் ஒரு பக்கம் முழங்கி கொண்டு இருக்க..

மாங்கல்ய தாரணம் நடக்க சில நிமிடங்களே.. இருந்த அந்த நேரம்..

சிறு தீப் பொறி..பொசுங்க ஆரம்பித்தன.. அலங்கார வண்ண வண்ண காகிதங்கள்..

கண்சிமிட்டும் நேரத்தில்..தற்காலிகமாக போடப்பட்ட கூரை பற்றி எறிய ஆரம்பித்தது..

எங்கும் தீ.. தீ.... தீக்கங்குகள் தான்..

சிரிப்புகள் அலறலாய் மாற.. எங்கும் அழுகையும் .. ஓலமும்..

இருந்ததோ ஒரே வழி..

தப்பிக்க எத்தனித்தனர் வந்திருந்த அத்தனை பேரும்..

இதில் வெளியேர முடிந்தோருக்கு. புது ஜன்மம் அன்று..

முயன்று தோற்றோர்.. முகம் கூட அடையாளம் தெரியவில்லை..


ஒளி இழந்தன பல வீடுகள்..

எத்தனை இழப்புக்கள்..

வார்த்தையால் விவரிக்க முடியாத துக்கம்.. எங்கும்..

என் வீட்டுலும் இருள் சூழ்ந்த நாளது..

உறவிலே என் அன்னையின் தமக்கை..

ஆனால்... என் உள்ளத்தை பொறுத்தவரை என் அன்னைக்கு மேலாக என்னை வழி நடத்தியவள்..

தோழியாய் துணை தந்தவள்..

வாஞ்சையாய் வழி காட்டியவள்..

நல்லதை நயமாக எனக்கு சொல்லி தந்தவள்..

பேரில் மட்டுமல்ல குணத்திலும் அவள் ஒரு சாந்த சொரூபி..
பளிச்சென்ற புன்னகை..

நடமாடும் விவித பாரதியாய்.. மெட்டுக்கள் முணுமுணுக்க.. வேலை பார்க்கும் பாங்கு.. எதை சொல்ல..

"கடவுள் எங்கே?" .. இந்த கேள்வி என் மனதில் திரும்ப திரும்ப கேட்டு சலித்து போய் விட்டேன்..

கனவுகள் பல சுமந்து.. கை கூடும் வேளையில்.. காணாமல் போனதேனோ..???????

."சக்கரை நிலவே..பெண் நிலவே ..
காணும் போதே கரைந்தாயே..
நிம்மதி இல்லை.. ஏன் இல்லை..
நீ.. இல்லையே.."

நீ விரும்பி முணுமுணுத்த ஒரு பாடல்...


உன் இனிமை குரலில் இனி எப்போது கேட்பேன்???????

காலம் உருண்டோடலாம்..

ஆனால்.. என் கண்ணில் இருந்து உருண்டோடும் கண்ணீர் நின்றபாடில்லை..

மிஞ்சி இருப்பது உன் பற்றிய நீங்கா நினைவுகள்..நினைவுகள்..

We miss YOU .. We miss YOU

Tuesday 20 January, 2009

பாட்டியின் நினைவுகளில்...

அன்பு மகனே!

பாட்டியைப் பற்றியும், பாடல்களைப் பற்றியுமுள்ள உன்னுடைய ஞாபக சக்திக்கு என் Hats off!

தலை தாழ்த்திப் பணிகிறேன்!

எனக்கு நீ சொல்லசொல்ல பாட்டிக் கூறியது நினைவு வருகிறது!

ஆங்கிலேயர் ஆட்சி காலம்.

பாட்டியோட அப்பா குமரலிங்கம் என்னும் ஊரில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

("கே"ஊர்கள்னு சொல்லி ஞாபகம்) கணியூர், கடத்தூர், கொழுமம், கொத்தாம்பாடி, குமரலிங்கம். காரத்தொழு

அங்கு ஒரு தமிழ் புலவர் அப்போதே உடனே கவி எழுதியதுதான் இந்த "சர்வா டம்ப்ரமாம் குமரலிங்கம் அங்கு தங்கும் மாணாக்கர்கள் கல்விச்சங்கம்"என்ற பாடல்!

இங்லிஷ் நோட்டு மெட்டுலே பாடின பாடல் இது!

(இந்த டியூனை கிடாரிலோ,வயலினிலோ நீ இசைக்கலாமே!)

பாட்டியின் அப்பா பெயர் ராமசாமி.

பாட்டியின் அப்பா ராமுப்பா, கூடப் பிறந்தவர்கள் உம்மாச்சிப்பா, காப்பிப்பா, ஒரு அத்தை லக்ஷ்மி(அப்பிச்சியம்மா)

ஆசையாய் குழந்தைகளுக்கு பட்சணம் (குழந்தை மொழியில்
அப்பிச்சி என்றால் பட்சணம் என்று பொருள்) செய்து தருவதால்!

கூட்டுக் குடும்பம்! பெரிய குடும்பம்!

பாத்திரம் நமக்கு அடிமையா? நாம் பாத்திரத்துக்கு அடிமையா? என்னும் பாட்டியின் பேச்சு, பாத்திரங்கள் பற்றாமையால் மட்டும் அல்ல! தேவைக்கு பயன் படித்துவோம்! என்ற எண்ணத்தில் கூறியது.

(பாட்டி இரண்டாம் வகுப்பு படித்து இருக்கிறாள். பாட்டிக்கு ஒன்பது வயசில் கல்யாணம். தாத்தாக்கு அப்போ 15 வயது)

தத்துவப் பாடலில் இந்தப் பாடலும்:

"எச்சில் எச்சில் என்கிறீர்! ஏதுங்கெட்ட மூடரே!
பொறந்தபிள்ளை எச்சிலோ? கறந்த பாலும் எச்சிலோ!"


ராமநாடகக் கீர்த்தனைகளையும், தேசிங்கு ராஜா கதை பாட்டுகளையும்,

"நாயகர் பட்சமடி! எனக்கது ஆயிரம் லட்சமடி!"

கூழேயானாலும் எனக்கது தேனே!
கொண்டவனிருக்கக் குறையென்ன மானே!"


போன்ற வேதநாயகம் பிள்ளையின் பாடல்களையும், சித்தர் பாடல்களையும், கவிகுஞ்சரர், சிவன், கோபாலகிருஷ்ண பாரதியார், போன்றோரின் பாடல்களையும் பாடி, தத்துவமும், தேச பக்தியும், பக்தியும் நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்தவள்.

"இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன்
எங்கள் தமிழன்!மேலாம்(எழிலுடையோன்)

கந்தமூலமே புசிக்கநேரினும் கடமை தவறவே
மாட்டான் தமிழன்!"


(எம்.எம்.மாரியப்பா பாடியது என நினைக்கிறென்)

தாரமங்கலம் டூரிங் டாக்கிஸ் கொட்டகையில் இந்தப்
பாடல்கள் ஒலிக்கும்! கேட்கும் தூரத்தில் வீடு.

கே.ஆர்.ராமசாமி பாடிய பாடல்களை அம்மா ரசித்துப் பாடுவாள்.

"இன்னமும் பராமுகம் ஏனம்மா! ஏழை
இடர்தவிர்ப்பதுன் பாரம்மா!"

"நீதானல்லாமல் துணை யார்!
மாதா பிதாவும் நீயே!"


வானொலியில் 50 களின் கடைசியில் பல மெல்லிசைப் பாடல்கள் அருமையாக இருக்கும்!

சுந்தரியும்,உமாவும் நினைவு கூர்ந்து சொன்ன பாடல்கள்! யார் எழுதிய பாடல் தெரியவில்லை! அருமையான பாடல்!

"இதய தாபம் தீருமா!இறைவா
எனது வேட்கை மாறுமா?
உடலின் நடிப்பும் ஓய்ந்திடவில்லை!
உயிரின் துடிப்பும் சாய்ந்திடவில்லை

நினைவுக்கப்பால் நெடுவழ ஓடி
கனவுக்கப்பால் கண்டது கோடி!

நிலையின்றி நானும் அழுதேன் தேடி!

பயிலும் வினையும் பண்படவில்லை!
பாடி அழுதும் உன்கண்படவில்லை!


இன்னொரு பாடல்..

கதிரவன் கிரணக் கையால் தொழுவான்!
சுதியோடு புட்கள் ஆடிப்பாடி துதி செய்யும்!
பொதியலர் தூவிப் போற்றும் தருக்களெல்லாம்
பூதம் தம்தொழில் செய் தேற்றும்!
அதிர்கடல் தனொலியால் வாழ்த்தும்!
அகமே! நீ வாழ்த்தாததென்னே...."


70 களில் வானொலிப் பாட்டொன்று,

"அஞ்சலி செய்தோம் பாரத தேவி!
அணுவொடுப் பயிலத் தேர்ந்தவளே!
சஞ்சலம் தீர்க்கும் செஞ்சுடற் செல்வி
சமத்துவ நெறியைச் சார்ந்தவளே!"

எஸ்.ஜானகி பாடிய பாடல். குமார் பாட்டுப் போட்டிக்கு பாடினான்.

(பொக்ரானில் அணு பரிசோதனை இந்திராகாந்தி ஆட்சிக் காலம்)

இந்தப் பாடல்கள் இப்போது கேட்கக் கிடைக்குமா?

இன்னும் உன் பள்ளிநாள், கல்லூரி நாள், நினைவுகளைப்
பகிர்ந்து கொள்ளேன்.

வாழ்க வளமுடன்!

Sunday 18 January, 2009

ராஜம்மாள் - பாட்டியின் நினைவுகள்

அம்மா,

என் குழந்தைப் பருவ (சில) வருடங்களில் நானும் பல பாடல்களை பாட்டி பாடி கேட்டிருக்கிறென்.

காந்தி லண்டன் சேர்ந்த பாடல் வட்டமேசை மா நாட்டிற்காக என வரலாற்றில் படித்து புரிந்து கொண்டது;

அதே சமயத்தில்,ஜார்ஜு துரை வரவிற்காக பாட்டியின் பள்ளி நாட்களில் பாடிய பாட்டு

( நினைவிருக்கிறதா? -

'ஐந்தாம் மன்னர் ஜார்ஜு துரை எங்கள் மஹராஜா,
அருமையான மேரியம்மாள் எங்கள் மஹராணி' )-

இன்னுமொரு பாட்டு King george coronation-பற்றி

'சக்ரவர்த்தி முடிசூடும் சம்ப்ரவமே,
தரணியங்கும் புகழும் வைபவமே,


லண்டனிலே ஸ்டீமரேறி ஏடென் வழியாக வந்து,
தண்டு தாளங்களுடன் ஜார்ஜு மன்னர் முடி புனைன்தார் ?

டெல்லி நகரத்திலே டிஸம்பர் பதினெட்டினிலே
சொல்ல முடியாதுஙம்மா, ஸ்வதேசி மன்னர் கூட்டமதை,

சக்ரவர்த்தி முடிசூடும் சம்ப்ரவமே,
தரணியங்கும் புகழும் வைபவமே

காந்திக்கும் பாட்டு, துரைக்கும் பாட்டு, என்ன சமத்துவம்!

'என்ன வார்த்தை சொன்னாயடா தொன்றம்மல்லண்ணா!,

நீ வந்தார்ப்போல் நவாபு வந்தால் நிமிஷமிருக்க மாட்டேன்,

பணம் என்ற சொல்லே காதில் விழுந்தால்
பாய்ந்து வெட்டுவேன் நான்,

டாரு டாராய் வெட்டிப் போடுவேன்
நவாபு சேனையைத் தான்!' -


வரிப் பணம் கேட்டு நவாபு அனுப்பித்த தூதரிடம் ராஜா தேசிங்கு வீரமாக பாடுவதான இந்தப் பாடலை பாட்டி ஆக்ரோஷமாய்ப் பாடும் போது வீட்டு விவகாரமெல்லாம் மறந்து போகும்.

பாட்டிக்கும் தான் என்று இப்போது நினைக்கிறேன்,

தாத்தா ''காப்பி பொடி வாங்கி பத்தே நாள் தான் ஆச்சு,அதுக்குள்ளே தீத்துட்டேளா'' என்று ஆங்காரமாய் கத்தினால்,

'என்ன வார்த்தை சொன்னாயடா........'

பொருத்தமாய்த் தான் இருக்கிறது!!!

இன்னும் பல பாடல்கள் கஷ்டங்களில் மட்டுமின்றி எல்லா சமயங்களுக்கும் பாட்டு ஒரு துணை பாட்டிக்கு.

பாட்டியின் அப்பா பள்ளிக்கூடத்தில் உள்ள எல்லா ஆசிரியர்களின் பெயரும் எனக்கு இன்னும் மனப்பாடம் இன்றும்!

‘சர்வாடம்ப்ரமாம் குமரலிங்கம், தங்கும் மாணாக்கர்கள் கல்விச் சங்கம்’

(மணிப்ப்ரவாளத்தை முழுதாக மறந்த எழுபதுகளில் எனக்கு இது முழுதும் புதிது,

‘சர்வ ஆடம்ப்ரம்’-மும் ‘மாணாக்கர் கல்விச் சங்கம்’- மும் ஒரெ வாக்கியத்தில் எழுத முடிகிற நடையை உதறி விட்டது ஒரு விஷயத்தில் தமிழின் நஷ்டமென்று நான் சொன்னால் தமிழ் பேசும் நல்லுலகத்தில் உதை படுவேன்!)

‘தரிசனமொடு தலைமியில் வரும் ப்ரெசிடென்ட் சார்,
தர்மதுரை ராமசாமிக் கௌண்டர்,
தன்யராம் ஹெட்மாஸ்டர் சார்,
தனமுத்து சுப்ரமண்ய பண்டிதரே,
தரமோர்க் கிள்ளை ? பெருமாள் பிள்ளை,
சாஸ்திரி ராமனாதய்யர் துரை ராமசாமி லக்ஷ்மிராஜு சம்மதியில்''


இதில் பாட்டியின் அப்பா ராமனாதய்யரென்று நினைக்கிறேன்.
இன்னும் தனது சகோதரியுடன் சேர்ந்து மாலை நேரங்களில் பாடிய பல பாடல்கள் பெரிய தாத்தா எழுதியது என நினைக்கிறேன் !

அம்மா, உனக்கு நினைவிருந்தால் வலை விரி!
(தேவி எனைக் காரம்மா)

பாட்டியைப் பற்றி சிலவிஷயங்கள் என் நினைவுகளில், வெகுளி, வாழ்க்கயைப் பற்றிய வரைமுறைகளில் சிறிதும் குழப்பமில்லாமல், கண்டதே காட்சியாய் வாழ்ந்து முடித்தவள்.
சூதுக்கும் வாதுக்கும் இடம் கொடுக்காமல் இதயமும் வாயும் ஒன்றாக வாழ்ந்தவள்.

'நாம் பாத்திரத்துக்கு அடிமையா இல்லை பாத்திரம் நமக்கு அடிமையா' என்பதான தர்க்கத்தில் வீட்டில் பாத்திரம் பத்தாத குறைபாட்டை மறக்க முயலும் escapism ஒரு weakness என சொல்லலாமோ?

இந்த விதமான வாழ்க்கை முறையால் ஏற்பட்ட பல குடும்ப பிளவுகளை she gracefully tackled.

பாட்டி தாத்தாவின் கல்யாண வாழ்க்கை, gives an insight into arranged Indian maariage.

இதைப் பற்றி இன்னொரு முறை எழுத வேண்டும்.!

நினைவலைகளில்...!

என் அம்மா பாடிய பாட்டுகள்!

"அடுத்து வந்த என்னைத் தள்ளலாகாது!
அரஹரா என்று சொன்னாலும் போதாதோ?"


அம்மா சமையல் உள்ளே கணீரென்று பாடுகிறாள்!

புகைமண்டிய, எரியாத அடுப்பை ஊதி ஊதி களைத்து, இந்த மாதிரியான பாடல்களை அம்மா பாடுவதை நான் பலமுறைக் கேட்டிருக்கிறேன்...

"சம்போ! கங்காதரா! சந்ரசேகரா! ஹரஹர!"

ஏதாவது கஷ்டமான சூழ்நிலைகளில் அம்மா பாடுவதை பல நேரந்க்களில் கண்டு கேட்டிருக்கிறேன்!

"கண்டாமணி ஆடுது! கண்டுபிணி வாடுது!"
"சிவலோக நாதனைக் கண்டு சேவித்திருப்போம்! வாரீர்!"


"உடலைவளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" திருமூலர் பாடல்!

"வெட்டவெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி!குதம்பாய்!"
போன்ற குதம்பை சித்தர் பாடல்!

"தாரகமே நீ பாரு! பவந்தாண்டியே கரை சேரு! மனமே! (தாரகமே)

இன்றைக்கு இருப்பார் நாளைக்கு காணோம்
நிலையில்லாக் காயம் மனமே!"


யார் பாடல்?தெரியாது!

இப்படியோர் பாடல்!

"மோசம் போகாதே! மனமே! மோசம் போகாதே!
ஒன்பது வாசலின் கூடு!
உற்று பார்த்தால் மலக்காடு!
துன்பதிற்காகிய வீடு!
இந்த துற்புத்தியைத் தள்ளி போடு!"


தேசபக்தி பாடல்கள் நிறையப் பாடல்கள் அம்மா பாடி கேட்டிருக்கேன்!

"பொழுது புலர்ந்தது! யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்!"


பெண்விடுதலைக் கும்மி பாடல்

" ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை யென்றெண்ணியிருந்தவர்
மாய்ந்து விட்டார்!"

"கற்பு நிலை யென்று சொல்ல வந்தால்
இருகட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம்!"


சிறப்பாகப் பாடுவாள்!

"கனிந்து வந்தேமாதரம் ஓதும்...
...லோகமான்ய பால கங்காதரத் திலகமே!
அஞ்சாத பால கங்காதரத் திலகமே!"

"காந்தி லண்டன் சேர்ந்தார் கைகூப்பித் தொழுவீர்!"

"கதர்கொடி கப்பல் தோணுதே!",


திருமதி சுந்தராம்பாள் பாடியது என நினைக்கிறேன்!

வள்ளலார் பாடல், தண்டலையார் சதகம், எல்லாம் அம்மா எப்படி எப்போது படித்து தெரிந்து கொண்டாளோ !

இதைத் தவிர கும்மி, கோலாட்டப் பாடல், கண்ணன் ஓடக் கும்மி, போன்ற பாடல்களும் அம்மா ஆசையாகப் பாடிக் காட்டியிருகிறாள்!

இன்னும் இன்னும் நிறைய! மும்மூர்த்திகளின் சில பாடல்களும் அம்மா பாடி கேட்டிருக்கிறேன்! என்னுடைய 30 களில்!

"மதுரைக் கரசியான கண்மணி!
மாட்சிசேர் மீனாட்சி அம்மணி!
சதுர்முகனோடு முனிவர் பணியும்
தாரணி! நாரணி1!பூரணி!காரணி!"


இன்னொரு பாடல்...

"தருவாய்!நல்வரம்!தாயே!வாணி!
தருண மிதுனதடிச் சார்ந்தெமைப் பேணி!
குருவாய் உலகில் குறை தவிர்த்திடவே
தருவாய் குருகிய மதி வினைக் கெடவே!"


பாபனாசம் சிவன் பாடல்களும் அம்மாவின் விருப்பமாகும்.

என் சிறியவயதிலிருந்து அம்மா பாடுவதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் என்பதை நினைப்பதே எனக்கு இன்றைக்கும் மகிழ்ச்சியை தருகின்றது!