Monday 14 December, 2009

எப்படியெல்லாம் எழுதினோம்...!

சிறிய வயதில், எப்படி எழுதக் கற்றோம்?

முதலில் கையில் கிடைத்தப் பென்ஸில், சாக்பீஸ் இவற்றால் சுவரெல்லாம் கிறுக்கி, கையில் கிடைத்தப் பேப்பரில் கிறுக்கி மகிழ்ந்தோம்!

பள்ளியில் வாத்தியார் பிள்ளைகள் கைப் பிடித்து, விரலால் மணலில்,'' நா ''வன்னா எல்லாம் எழுதக் கற்றுத் தந்தார்!

பின்பு, சிலேட்டில் (பலகையில்) எழுதினோம். அப்போ ஒண்ணாப்பு, ரெண்டாப்பு வந்திருப்போம்!

பென்ஸிலில் (பலப்பம்) பலவகைகள் இருக்கும்! கல் பென்சில், மாப்பென்சில், கலர் கலரான மாப்பென்சில் ...இப்படி...

சாதாப் பென்சில் சிலசமயம் சிலேட்டில் கீறல் செய்யும். ஆனால், கல் பென்சில் அப்படியே 'அச்சுக் கொட்டும்!

மேல்வகுப்பு வந்தால், காகிதப் பென்சிலில் நோட்டுப்புத்தகத்தில் எழுத வேண்டும். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

அப்புறம் பேனாவில், இன்க்(மை) தொட்டு எழுதும்பேனா! பிறகுதான் 'ஊற்றுப் பேனா'வில் எழுதும்பழக்கம் வந்தது!

இன்னும் எளிதாக 'ஜெல்' வகையறாப் பேனாக்களும் பவனி வந்து எழுதும் ஆசையைத் தூண்டுகின்றன!

இன்று...எங்கேயோ போய்விட்டோம்!!!

கணினி பொத்தானைத் தட்டிவிட்டால் 'அச்சு அச்சாக' எழுத்துகள் பூவாய்க் கொட்டுகின்றனவே! மை இல்லை! பேனா இல்லை! தாள் இல்லை!

விந்தையிதை என்னென்போம்?

கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்வோம்!

Wednesday 9 December, 2009

விவசாயம், தானியங்கள்(தவசம்), சம்பந்தமான வினைச் சொற்கள்:

தமிழில், வினைச் சொற்கள்... விவசாயம், தானியங்கள்(தவசம்) சம்பந்தமான வினைச் சொற்கள்:

நிலத்தை உழுதல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், உரம் இடுதல், களை எடுத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல்,

பரம்படித்தல், பண்படுத்தல், தூற்றுதல், தானியங்களை அரவைமெஷினில் அரைத்தல், அல்லது உரலில் குத்தி புடைத்தல், முறத்தைக் கொண்டு புடைத்தல், குறுணையைக் கொழித்தல், கல்லைத் தரித்தல்,

அரிசியாகி சமையலறைக்கு வந்து அரிச்சிடப்பட்டு, அங்கும் கொஞ்சம் கற்கள் இழி ஏத்தி, கற்கள் நீக்கப் பட்டு, உலையிலிடப்பட்டுச் சோறு ஆகிறது!

நம் உயிர்க்கு உரமளிக்கிறது!

துவரம்பருப்பு, செம்மண்ணினால் கட்டி, வெயிலில் காயவைத்து, எந்திரத்தில் உடைத்தல், கடுகினை நேம்புதல்,(கல்,தூசிநீக்குதல்) இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

Sunday 6 December, 2009

அதிர்ச்சி வைத்தியம்!

தினம் விளையாட வரும் பத்மாவை இப்போதெல்லாம் காணோமே?

பத்மாவும்,சுந்தரியும் விளையாட்டுத் தோழிகள்!

பத்மாவுக்கு எட்டு வயசு இருக்கும்! சுந்தரிக்கு ஆறு வயசு இருக்கும்!

வீட்டில் அம்மாவைக் கேட்டால் 'அவளுக்கு அம்மை போட்டிருக்கு! அவ வீட்டு வாசலில்
வேப்பிலைச் செருகியிருக்கு பாரு!' அப்படீங்கறா!

ஒரு நாள்,சுந்தரி, மெதுவா பத்மா வீட்டுக்குப் போனாள்!

உள்ளே அந்த அறையின் ஜன்னல் வழியாப் பாத்தக் காட்சி!

ஒரே ஓட்டம்!

சுந்தரி, வீடு வந்துதான் மூச்சு விட்டாள்!

வாழை இலையில்...கருப்பா, துரும்பா இளைச்சு ஒரு உருவம் கிடந்தது! பெரியம்மை(வைசூரி) (1940 களின் இறுதிகளில் என்று நினைவு!)

பத்மாவின் அம்மா, மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, தினமும் குளித்து விட்டு, மாரியம்மன் சந்நிதியின் முன்னே வேண்டி கொண்டு, எதிரிலிருக்கும் கம்பத்தின் மீது நீர் ஊற்றுவார்!

இன்னும் என்னென்ன வேண்டுதல் உண்டோ எல்லாம் பக்தி,சிரத்தையோடு செய்து வந்தார்!

மாரியம்மா கண்ணு தொறந்துட்டா! பத்மா சிறிது சிறிதா குணமடைஞ்சா!

நல்ல காலம்! கண்கள் பாதிக்கலை!

கால ஓட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமா குணமாகி வந்தா!

உடம்பெல்லாம் இன்னும் தழும்பு நிறம் மாறவில்லை!

பத்மா வெளியிலே வளைய வர ஆரம்பிச்சுட்டா!

பத்மா வரான்னு சொன்னாப் போதும் சுந்தரி சமையல் அறைக் கதவுக்குப் பின்னால்,கண்ணை இருக்க மூடிக் கொண்டு கத்துவாள்!

பத்மாவும் ஏமாற்றத்தோடு போய் விடுவாள்!

சுந்தரியிடம் 'பத்மா வரா!' என்று சொன்னாலே போதும்! பயத்தோடு கண்ணைப் பொத்திகொண்டுக் கத்துவா!

ஒருநாள்! ஞாயிற்றுக் கிழமை! விடுமுறை தினம்!

சுந்தரியும், அவள் தோழிகளுடன், தன் வீட்டில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்!

அப்போது சுந்தரி வேகமா ஓடி வந்துகொண்டிருந்தா! எதிரில் யார்மீதோ மோதிக் கொண்டு,
இரண்டு பேரும் கீழே விழுந்தார்கள்!

வலியுடன்,தலையைத் தடவி கொண்டே...நிமிர்ந்துப்...பார்த்தாள்....

பார்த்தவுடன் சிரிப்பு...சிரிப்பு!....

பத்மாவைப் பக்கத்திலே பார்த்ததும் பயம் விலகிவிட்டது!

பத்மாவும் இப்போ நிறைய குணமாகிவிட்டாள்! தழும்புகள் இருக்கு!

எதிர்பாராதத் திடீர் சந்திப்பு சுந்தரியின் பயத்தைப் போக்கிவிட்டது!

நல்ல அதிர்ச்சி வைத்தியம்!

Saturday 5 December, 2009

கண்ணன் என் தம்பி! -- 3

சேலம் ராமகிருஷ்ண மடத்தையும், மடத்துச் சான்றோர்களையும் காண மிகவும் ஆவலாக இருந்தான்!

கண்ணனின் எண்ணம் நிறைவேறியதா?

ராஜு! எங்கள் (சித்தப்பா மகன்) தம்பி வந்தான். சேலம் செல்ல ஏற்பாடு செய்தான்!

ஒரு வேனில், கண்ணனை சிலர் (கை உருளையோடு) ஏற்றினார்கள். ராஜு கண்ணனுடன் சென்று அவனுக்கு உதவியாக இருந்தான்!

கண்ணன் மனம் மகிழ அங்குள்ளப் பெரியோரைச் சந்தித்தது, அங்கு நடந்த பூஜையில் கலந்துகொண்டது(எல்லாம் உருளையுடன் நகர்ந்து...நகர்ந்தே..)

இன்னும் சொல்லியிருப்பான்! எனக்கு நினைவில்லை!

இப்படியே ஒன்பது வருடங்கள் உருண்டது! உடல் நலமின்றி, ஆகாரம் செல்லவில்லை!

டாக்டரும் வந்தார்! மருந்துகள் கொடுத்தார்! ஒன்றும் பலனில்லை!

மூச்சுத் திணறல் வந்தது!

அக்கம் பக்கம் சொந்தக்காரர்கள் வந்து பார்த்துச் சென்றனர்!

இதற்குள் ராஜு, சேலம் மடத்திலிருந்து பிரசாதம் வாங்கி வந்தான்!

மூன்றாவது அண்ணாவின் மடியிலேயே... இரவு சென்றது...

மூச்சுத் திணறல்....

பக்கத்து வீட்டுப் பெரியப்பா சொல்கிறார்: 'நாங்கள்ளாம் அஞ்ஞானிகள்! நீ ஞானஸ்தன்! ஒனக்கு சொல்றதுக்கு என்னப்பா இருக்கு! நாராயணா ங்கற நாமத்தை கெட்டியாப் பிடிச்சுக்கோ!'

கண்ணன் சந்நியாஸம் வாங்கிண்டான்!

தபால் மூலமாக...(விவரம் சொல்லலை) குரு பாயின் புனித காவி வஸ்திரத் துளி(பிட்)

அதை மூச்சுக்குக்கும், இதயத்துக்கும் வைத்துக் கொண்டான்.

அதுவும் முடியலை! மூச்சு வாங்கறது!

விரல்கள் ஜப மாலையை தேடுவதுபோல் தோன்றியது!

ராமகிருஷ்ணர் படத்தை அவன் கண் முன்னாலே காட்டிண்டு, 'ஓம் ராமகிருஷ்ணா! ஓம் ராமகிருஷ்ணா!' ந்னு நான் பலமா சொல்ரேன்!

பக்கத்து வீட்டு சந்துரு அண்ணா அப்படியே கரம் கூப்பிண்டிருக்கின்றார்!

கண்ணன் விடுதலைப் பெற்று விட்டான்!

ராமகிருஷ்ணர் பதம் சேர்ந்தான்!

அப்போது அவனுக்குவயது இருபத்தியேழு!

நிறைவுற்றது.



--------------------------------------------------

கண்ணன்(சிவாம்ருதம்) தமிழில் கவிதைகளும், கீர்த்தனைகளும் இயற்றியுள்ளான்.

அவற்றிலிருந்து...

கீர்த்தனை--- 1
====================

ராகம் திலங். தாளம் ஆதி.

பல்லவி
=======

நம்பினேன் அருள்செய் நாயகனே!உன்பால்
நாளும் பக்திஓங்க நீளும் பிறவி நீங்க(நம்பி)

அனுபல்லவி
==========

அம்பிகை ஸ்ரிபவ தாரிணி பாலா!
அன்னை சாரதையின் ஆருயிர் மணவாளா!(நம்பி)

சரணம்
======

வஞ்சப் புலனைந்தைக் கொஞ்சமும் நம்பிடேன்!
..வந்த உலகை எந்தன் சொந்தமாய் நம்பிடேன்!
தஞ்சமென் ருன்மலர்த் தாளையே நம்பினேன்!
..தாமதம் செய்யாதே! ராமக்ருஷ்ண தேவாஉனை(நம்பி)
--------------

கீர்த்தனை--- 2
====================

ராகம் சரஸ்வதி தாளம் ரூபகம்.

பல்லவி
========

பகவானைப் பணி மனமே!
பரமஹம்ஸ ராமகிருஷ்ண (பக)

அனுபல்லவி
===========

சுகவாழ் வுற்றிடவே சத்
..சிதானந்த ஸ்வரூபனை (பக)

சரணம்
========

தூய அன்னை நேயனைஅன்பர்த்
..துயர் நீக்கும்ச காயனை
மாயனை குரு மஹராஜனை
..மஹாதேவ கதாதரனை (பக)
-------------


பகவான் ராமகிருஷ்ணருக்கு, மலர்களால் அருச்சனை!
---------------------------------------------------

வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!

தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!

----------------

Friday 4 December, 2009

கண்ணன் என் தம்பி! - 2

பெற்றோர் கண்ணனுக்கு வைத்த பெயர் சிவாம்ருதம்.

அப்பா அப்படித்தான் கூப்பிடுவார்!

பள்ளியில் கொடுத்த பெயர் சிவாம்ருதம்.

நாங்கள்தான் கண்ணா! கண்ணா! என்று கூப்பிடுவோம்!

நிறைய புத்தகங்கள் மூலமாக, விவேகானந்தரையும், ராமகிருஷ்ண பரமஹம்ஸரையும் அறிந்து கொள்ள முயன்றான்.

ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் (குரு பாயிக்கள்) துரியானந்தர், லாடு போன்றோர் வரலாற்றையும் படித்தான்.

"காஸ்பெல் ஆப் ராமகிருஷ்ணா" புத்தகம் படிக்க ரொம்ப விரும்பினான்.

அவன் ஆர்வம் பலித்தது! விலைக்கு வாங்கப் பட்டது!

ராமாயணப் பலகையில் வைத்து படித்து வந்தான்.

ஆன்மீக விஷயமாக வரும் சந்தேகங்களை, பேலுர் மடத் துறவிகள், அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மடத் துறவிகளிடம் கடிதம் எழுதித் தெளிவித்துக் கொள்வான்.

தபாலுக்காகக் காத்திருப்பதில் ஒரு மகிழ்ச்சி அடைவான்!

வீட்டில் ராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி போன்ற சஞ்சிகைகள் தருவிக்கப் பட்டன.

சேலம் மடத்துடன், கடிதப் போக்குவரவு வைத்திருந்தான்.

"சகோதரி நிவேதிதா" மீது பாடல் எழுதி கல்கிக்கு அனுப்பினான்.

அது வெளிவந்தது! 30, அல்லது 50 ரூபாய் கிடைத்தது !

ராமகிருஷ்ணரின் உருவப் படத்திற்கு, எவர்சில்வர் பிரேம் போட்டு வைத்துக் கொண்டான்!

திரு.ரா.கணபதி அவர்கள் "அறிவுக்கனலே! அருட்புனலே!"

முதல் பதிப்பு -வருடம் 1965. விலை -ரூ.12. கலைமகள் காரியாலயம்.

ராஷ்ட்டிரபதி எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டு கௌரவித்தது.


மேற்சொல்லப்பட்ட புத்தகத்தை, திரு.ரா.கணபதி அவர்கள் தம் கைப்பட சிவாம்ருதத்தின் நலம் விழைந்து,

"குருமஹராஜின் கிருபையால் ச்ரி. சிவாம்ருதத்திற்கு ஆன்ம நலன், உடல் நலன் இரண்டும் கிட்ட வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

ரா.கணபதி."

என்று எழுதி புத்தகத்தை அளித்துள்ளார்.


பகவான் ராமகிருஷ்ணர், சாரதாமணி தேவி, விவேகானந்தர் இவர்களின் பிறந்த தினம் அன்று, துதிப்பாடலுடன், இனிப்பு (தேங்காய் பர்பி) செய்து வணங்குவோம்!

தமிழில் கவிதைகள், கீர்த்தனைகள் இயற்றினான்.

அவனுக்கு எழுத முடியாத போது நாங்களும் உதவியாக எழுதுவோம்

சம்ஸ்க்ருதமும் அவனாகக் கற்றுக் கொண்டு "பகவத் கீதை" படிக்கலானான்.

சேலம் ராமகிருஷ்ணா மடம் சென்று பார்க்க ஆசைப் பட்டான்.

இன்னும் வரும்....

Thursday 3 December, 2009

கண்ணன் என் தம்பி! - 1

சின்ன வயதில் கண்ணன் வீடே தங்க மாட்டான்!

விளையாட்டுத்தான் அவனுக்கு எப்போதும்!

அவனுடன், ராஜுவும் (எங்கள் சித்தப்பா மகன்) சேர்ந்தால் கொண்டாட்டம்தான்! ரெண்டு பேரும் ஏறக்குறைய ஒரே வயதினர்!

கோவிலில் திருவிழா என்றால், இவர்கள் அங்கே வேடிக்கைப் பார்க்கச் சென்று விடுவார்கள்!

மாரியம்மன் மஹமேருவில் (புஷ்பப் பல்லக்கில்) ஊர்வலம்! அதுக்கு பூக்களெல்லாம் அலங்கரிக்கிப்பதைப் பார்ப்பது ஒரு வேடிக்கை!

வேலை செய்யும் கலைஞர்களுக்கு ஏதாவது சின்ன உதவிகள் செய்வார்கள்!

இரவு வீட்டிற்கு வரும்போது பயத்தோடு வீட்டினுள் நுழைவார்கள். ஏனென்றால்,அப்பா கோவத்தோட கத்துவார்! படிக்காம, சாப்பிடாமே ஊர் சுத்துகிறார்களே என்று அக்கறை!

கண்ணன் ரொம்பக் கோவக்காரன்! அவன் கேட்டது கிடைக்கலேன்னா ஒரே ரகளைதான்!

அடிக்கடி கால்வலின்னு சொல்வான்!

அப்பா மேலே கால் போட்டுண்டு படுத்துப்பான்! அப்பா அவன் காலைப் பிடித்து விடுவார்!

படிப்பில் சூடிகையா இருந்தான்!

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, பத்தாம் வகுப்பு முழு பரீட்சை முடிஞ்சு...லீவு! நீண்ட விடுமுறை!

இன்னொன்று சொல்ல மறந்தேனே!

அவனுக்கு ஏசிசி யில்சேர ஆர்வம்!(என்.சி.சி மாதிரி)

அதுக்கு காக்கி சீருடை, ஷூ,தொப்பி எல்லாம் வாங்கணும்!
அப்பா காசு கஷ்டம்! முடியாதுங்கறார்!

ரெண்டாவது அண்ணாகிட்ட கேட்டு வெச்சிருக்கான். அவரும் சரீன்னுட்டார்! வாங்கி கொடுத்தாரே! ஆசையோடு தொப்பியைப் போட்டுப் பார்த்து மகிழ்ந்தானே!

ஆனா விதியோட விளையாட்டை என்னன்னு சொல்றது?

கடுமையானக் காய்ச்சல்! நாலு நாளா வாட்டறது!

உடம்பை அசைச்சால் வலீன்னு கத்தறான்! இன்ச் கூட நகர முடியலை!

டாக்டர் வீட்டுக்கே வந்து பார்த்தார்! காய்ச்சல் கொறஞ்சிது!

ஆனா நேரா நடக்க முடியல்லே! ஒரு கோல்(தடி)பிடித்து நடக்க முயன்றான்.

அந்த சமயம் என் கல்யாணம்! வீட்டிலேயே! (திருமண மண்டபம்கிடையாது)

இந்த நிலையில்,நான் புகுந்த வீடு சென்றேன்!

என் அம்மாவும், தங்கைகள் ரெண்டுபேரும், அவனைக் கவனித்துக் கொண்டனர்!

கண்ணனுக்கு சுத்தமா நடையே வரவில்லை!

கால்கள் இரண்டும் முடக்கி விட்டது!

படுக்கும் போது கூட,கால்கள் முடங்கியே தான் இருக்கும்!

கால்களை நீட்ட முடியாது! கைகளில் வலது கை டனா அளவுக்கு வரும்.

"வாயோடு குந்தாணி" தெரியும்தானே?

அதுதான் அவனுக்கு நகர்ந்து செல்ல உதவியாக இருந்தது!
அதை வலது கையால் உருட்டிண்டு வருவான்! மற்ற எல்லா வேலையும் இடது கையில்தான்!

அவன் எழுந்து உருளையை உருட்டிண்டு, தொட்டி முத்தத்திலே, பல் தேய்ச்சுண்டு, காலைக் கடன் எல்லாம் முடிச்சிப்பான்!

அம்மா கவனிச்சுப்பார். சகோதரிகளும் கவனித்துக் கொள்வர்.

அவனுக்காக வீட்டில்'ரேடியோ'வாங்கினார்கள். அப்போ வானொலி சஞ்சிகை மாதா மாதம் வெளிவரும். அதில்,பாடல் பயிற்சியில் பாட்டும், ச்வரமும், ராகமும் எழுதி யிருக்கும்!

தாளம் "அரை எடுப்புத் தள்ளி" ந்னு இருக்கும். சரியாப் பாடிடுவான்!

தாளங்களை ரசிச்சுக் கேப்பான்!

கச்சேரிப் பாடல் நடக்கும் போது, அதுக்கு சரியாக் கொன்னக் கோல் சொல்லுவான்!

இன்னும் வரும்....

Tuesday 1 December, 2009

வீடு ! - 4

புழக்கடை ரேழியைக் கடந்து சின்ன தாழ்வாரம் அதையொட்டி 'வெந்நீர் உள்'.

அப்புறம், புழக்கடையில் மேற்கால ஒரு சேந்து கிணறு!

எங்க சித்தப்பா, பெரியப்பா வீடும் எங்கள் வீட்டை ஒட்டி இருக்கும்.

புழக்கடை கிணற்றை எல்லோரும் உபயோகிப்போம்!

தெற்கு மூலையிலே அந்தக்கால கழிப்பறை! மேற்கூரை கிடையாது! வெட்ட வெளியா இருக்கும்!

இப்போ வீட்டுக்குள்ள வருவோம்!

கூடத்தைத் தொட்டாற்போல ஒருபுறம் சமையல்'உள்'

இன்னொருபுறம் 'கண்ணன் உள்'!என் தம்பியின் அறை!

சின்னவயசில, காய்ச்சல் வந்து கால்கள் நடக்க முடியாமே முடக்கி விட்டது. கையும் ஓரளவு இயங்கும்!

அவன் அந்த உள்ளில் தான் படிப்பு, தியானம் எல்லாம்! அவன் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பக்தனாக இருந்தான்!

இந்த வீட்டில்தான் பகவான் அடி அடைந்தான்!

பிறகு,வாசல் ரேழியை ஒட்டி,'படுக்கும் உள்'

அந்த உள்ளில் ஒரு அட்டாணி(பரண்) இருக்கும்.

அந்த அறையை பலகை மச்சு உள்'ளுன்னு சொல்வார்கள். குளிருக்கு அடக்கமாக இருக்கும்.

புழக்கடை நிலம் விற்கப்பட்டது! வீட்டின் இடதுபக்கத்து நிலம் விற்கப்பட்டது! இரண்டு சகோதரிகள் திருமணங்கள் நடந்தன!

வீட்டின் பழுதை சரி பார்க்கமுடியா சூழ்நிலை!

தருமபுரிக்கு மாற்றல் வந்தது!

என் பெற்றோருடனும், என் பெண்ணுடனும், தருமபுரி வந்து சேர்ந்தேன்.

மின் அலுவலர் வேலை(எழுத்தர்)

சின்ன மகன் கோவையில் டாக்டருக்கு படித்தான்.

பெரிய மகன் டெல்லியில் எஞ்சினீயரா வேலைப் பார்த்து வந்தான். தம்பியை, எங்களை கவனிச்சுக்கிட்டான்.

அப்பாக்கு வீட்டை விட்டு வந்தது பிடிக்கவில்லை!

கொஞ்ச நாளில் அப்பாவும் இறந்தார். அம்மாவும் சிலவருடங்களில் இரண்டாவது அண்ணன் விட்டில், பாரிஸ வாதத்தால் இறந்து போனார்.

வீடு விற்கப் பட்டது! அது தரைமட்டம் ஆக்கப் பட்டது!

உயிரோட்டமுள்ள வீடும் ஒரு நாள் இல்லாமல் தான் போகும்!


எங்கள் மனசில் என்றும் குடியிருக்கும் வீடே! உன்னை மறக்க முடியுமோ?

எங்கள் வாழ்க்கைக்கு சாட்சியாய் இருந்தாய்! ஆதாரமாக இருந்தாய்! உன்னை என் உயிருள்ள வரையும் நினைத்திருப்பேன்!

முடிந்தது...