Friday 12 March, 2010

சந்தை!



ஒரு காலத்தில், மக்கள் தங்களிடமுள்ள பண்டங்களை ஓரிடத்தில் கூடி, விற்பனை செய்வார்கள்.

அது பணம் பெற்றுக்கொண்டோ, அல்லது பண்ட மாற்றாகவோ நடைபெறும்.

தனது ஆசை எண்ணமாக, பாரதியாரும் தம் பாடலில் கூறுவார்!

"கங்கை நதிப் புரத்துக் கோதுமைபண்டம்
...காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்"
சிங்க மராட்டியர்தம் கவிதைக் கொண்டு
...சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!"


பண்டைக் காலத்தில்,திருவிழாக்காலங்களில், மக்கள் கூடி,தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். இப்போதும் திருவிழாவின் போது "சந்தை" கூடும்!

ஆனால் "வார சந்தை" என்பது கிராமத்து மக்களுக்கு மிகவும் முக்கியம். அன்றாட தேவைகளுக்கு ஏற்ற பொருள்களை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்குச் செல்வார்கள்.

எங்கள் ஊரில் (தாரமங்கலம்) வியாழன் தோறும் சந்தை கூடும்!

சந்தை என்றால் ஒரு எதிர்பார்ப்பு எங்களுக்கு!

எங்கள் தந்தை காய்கறிகளுடன், பொரிகடலை, பழங்கள் வாங்கி வருவார்!

எங்களுக்கெல்லாம், (நாங்கள், எங்கள் சித்தப்பா பசங்களோட ஏழு, எட்டு பேரு இருப்போம்!) பகிர்ந்து உண்ணுவதில் மகிழ்ச்சி!

அந்தந்த காலத்தில் என்னப் பழம் கிடைக்குமோ, வாங்குவார். மாம்பழம், கொய்யாபழம், வெள்ளரிப்பழம்(வெல்லம் தொட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்!) கோசப் பழம்(தர்பூஸணிப் பழம்!) பேரிக்காய், சீதாப் பழம் போன்ற பலவகைப் பழங்கள்...

கரும்பு, அப்பா வெட்டித் தருவார். நாங்கள் வாசலில் கதைப் பேசிகொண்டே கரும்பைக் கடிச்சி, உறிஞ்சிக் கொண்டே...ப் பேசுவோம்!



காய்களெல்லாம் கூறு,கூறாகத்தான் விற்பார்கள்!

அக்கம்பக்கத்து கிராமத்தில் விளையும் காய்களும் புதுசாகிடைக்கும்!

கொளத்தூரு கத்திரி பிஞ்சு ஒரு புட்டிக்கூடை ஒரு ரூவாய்க்கு வித்திருக்கு!

எங்கள் வீட்டு புழக்கடையில், பந்தலில், அவரை, பீர்க்கங்காய்,புடலை எல்லாம் காய்க்கும்!

வெங்குவின் படைப்பு! உழைப்பு! வெங்கு என் அண்ணன்(சித்தப்பா மகன்), நன்றாக தோட்ட வேலை செய்வார்!

("வெங்குவின்கடை" யில் வரும் அதே வெங்கு!)

அவரைக் "கீரை மாஸ்டர்" என்று கூறுவோம்! கீரை பாத்தி கட்டி பாதுகாத்து வளர்ப்பார்!

சந்தையை விட்டு விட்டேனே! சந்தையில் தானியங்கள், புளி, மிளகாய், கொத்தமல்லிவிரை(தனியா) விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களும் கிடைக்கும்!

மக்களுக்குச் சேந்து கிணத்துக்கு வேண்டுமென்ற கயிறு, வாளி (பக்கெட்டு) எல்லாம் கிடைக்கும்!

கயிறு "பத்து மாரு, பதினஞ்சு மாரு" என்ற அளவில் வாங்குவார்கள் !

காய்கள் என்று சொல்லும்போது உருளைக் கிழங்கு (என்பது அபூர்வம்!) சந்தையில் அப்பா வாங்குவார்!

மறுநாள், வெள்ளிக்கிழமை "உருளைக் கிழங்கு பொடிமாஸ்" உண்டு! சாம்பார் (சின்ன வெங்காயம் போட்டு) உண்டு!

பெரிய வெங்காயம் அப்போதுதான் கிராமத்துக்கு வந்தது! அதிசயமா இவ்வளவு பெரிய வெங்காயம் என்று அதிசயித்திருக்கிறேன்!

வியாழன், கல்கி வரும் நாள்! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

இன்னொரு மறக்க முடியாத நினைவு!

சந்தைக்கு சந்தை தவறாமல், கண் தெரியாதப் பிச்சைக்காரர் ஒருவர் தெருவில் பாட்டுப் பாடிப் பிச்சைக் கேட்பார்!

காச்சனீ முத்துக் கருப்பங்களா!
கரும வாதனையில் உழன்றேன்!


(காசினியில் முத்துக்கருப்பஙளே! நான் கரும வாதனையில் உழல்கிறேன்!)

அடுத்து தன் வயிற்றில் அடித்துக் கொண்டு,

"ஒத்துருனாச்சும், ஆணைப் பெண்ணைப் பெத்த புண்ணியரே! ஒரு காச்சுனாச்சும் போடுங்கய்யா! அம்மா!"

வாசலில் தெருவில் காணும் காட்சி!

சந்தையிலிருந்து வரும் மக்கள் அவருக்குத் தின்பண்டமாக அவித்தக் கிழங்கு போன்றவை தருவார்கள்! காசுகளும் போடுவார்கள்! எங்கள் வீட்டிலும் அவருக்குக் காசுகள் தருவோம்!

சந்தைன்னு நினைத்தாலே, அந்த பிச்சைக்காரர் நினைவு வரும்!

பிறகு என்ன ஆனர் தெரியவில்லை!

Monday 8 March, 2010

பெண் !




"அம்மா! ராத்திரி நான் தூங்கும்போதும் வீட்டுவேலைன்னு எங்கிட்ட படுத்துக்க மாட்டே!

காலையிலும் வேலைன்னு நான் முழிச்சுக்கும்போது, பக்கத்துலே இருக்க மாட்டே!"

இது ஒரு பெண் குழந்தையின் புலம்பல்!

"ஷூவை இப்படி போட்டுண்டு, நாடாவை இப்படி கட்டு!" என்று ஜாடையில் சொல்லித் தரும் அம்மா!

நான்கு வயதுக் குழந்தைக்கு அம்மா கிடைக்க மாட்டாள்!

அப்போதெல்லாம் பெரியவர்களுக்காக (அம்மா) மடியாய், ஆசாரத்துடன் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்!

வேலைக்குப் போகும் அம்மாதான் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று இல்லை!

வீட்டில் இருக்கும் அம்மாவும் குழந்தைகளுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று அப்போது இருந்த காலம் உண்டு!



பெண் என்பவள் தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் வாழ்ந்து சகாப்தம் படைத்திடுவாள்!

பெண்மை, அன்பில் ஒளிர்கின்றது!

பெண்மை பொறுமையில் மிளிர்கின்றது!

இன்றைய பெண்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கொள்ள வேண்டும்!

அதனால் உயர்வே அன்றி தாழ்வு வாராது!



இன்றைய ஆண்கள் பெண்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர்!

இரு கண்களாக ஆணும், பெண்ணும் அனுசரணையாய் வாழ்வதுதான் நிறைந்த வாழ்வாகும்!

பெண்ணின் பெருமையே பெருமை!

தனித்துவம் வாய்ந்து உயர்வினில் வளர்வது!!

பெண், குடும்பத்தை அரவணைத்து அன்பு செலுத்துவாள்!

குடும்பத்தில் அவளுக்கென இருக்கும் இடத்தை, யாராலும் நிரப்பிவிட முடியாது!

அவளுக்கு நிகர் அவளே!

இன்றைய நாகரீக உலகினில், பெண், ஆணுக்கு நிகராய் வானில் பறந்து, மண்ணில் அலைந்து வீடு காத்து, நாடும் காக்கின்றாள்!

"பெண்மை வெல்க!" என வாழ்த்துவோம்!

Tuesday 2 March, 2010

கண்ணன் குழல் அமுதம்-- 2.

கண்ணன் வேய்ங்குழல் ஊதற்சிறப்பு!
=================================

கண்ணனின் குழலிசை அமுதப் பிரவாகமாய் வழிகிறது!

உயிரினங்கள் எல்லாம் அந்த இசையில் கட்டுண்டு எப்படியெல்லாம் காட்சி அளிக்கின்றன!

பறவைகள் தன் கூடுதுறந்து தரையின்மீது கிடக்கின்றன ! கறவைகள் கால்பரப்பி, தலை தாழ்ந்து செவியாட்டாமல் அப்படியே நிற்கின்றன!

மருண்டமான்கள் மேய்தலை மறந்து,வாயிலுள்ள புல் கடைவாய் வழியாய் வெளியே நழுவும்படியாகத் தன்னை மறந்து, இருக்கும் நிலை, வரைந்த ஓவியங்களாய் அசையாதச் சித்திரங்களாய்க் காண்கின்றன!

என்னென்பது குழல்வழி அமுதகீதம்! யாதவக்கண்ணனின் கருணைநிறைந்த லீலையன்றோ?

குழலிசையில் உயிரினங்கள் எல்லாம் தன்நிலை மறந்து இருக்கும்போது மனிதராகிய நாம் எம்மாத்திரம்?

வண்டினம் சூழ்ந்த தாமரை போல சுருண்டுருண்ட குழல் சூழ்ந்த முகமலரோன், முகில்வண்ணன் சிறு வியர்வைத் துளிர்க்கும்படியான புருவங்கள் கூட, சிவந்த கண்கள் செருக
குழலின் துளைகளைச் சிறுவிரல்களால் தடவி குழலூதும் போது, குவியும் செவ்விதழின் அழகு போன்ற அற்புதக் காட்சிகளும், உயிரினங்களின் தன்னை மறந்த நிலைகளும் எழுதியச் சித்திரமாய்ப் படைத்து நமக்கு அளித்த பெரியாழ்வார் அனுபவித்ததை நமக்குப் பாடல்களாக
அளித்து அருளிச்செய்துள்ளார்!

நாம் இப்பாடல்களைப் படித்து உணர்ந்து, அனுபவித்து உய்வோமாக!

பாடல்கள் இதோ:

சிறுவிரல் கள் தடவிப் பறிமாறச்
..செங்கண் கோடச் செய்ய வாய்க்கொப் பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக்
..கோவிந்தன் குழல் கொடூதி யபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
..வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்ப ரப்பிட்டுக்
..கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே!

திரண்டெ ழுதழை மழைமுகில் வண்னன்
..செங்க மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்
..ஊது கின்ற குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து
..மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
..எழுதுசித் திரங்கள் போல நின்றனவே !