Friday 26 February, 2010

கண்ணன் குழல் அமுதம்!

இப்பாடலை ஒருதரம் படித்தேன்.

அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்!

நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை
மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார்.

கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! "செம்பெருந்தடங்கண்ணன்!"

அவர் பார்வை தோளழகில் விழுகிறது!

கம்பன் சொன்னானே! "தோள் கண்டார் தோளேகண்டார்!" என்பது போல பெரியாழ்வர் "திரள் தோளன்" என்று கண்ணனின் புஜ பல பராக்கிரமத்தைப் பேசுகிறார்!

யசோதையின் மழலையாய், வளர்ந்து, பல அற்புதங்களை கோகுலத்தில் நிகழ்த்தி யாவர்
மனத்தையும் கொள்ளைக் கொண்ட யாதவச் சிறுவன்.

யசோதையும், பரந்தாமனைக் கொஞ்சி, குலவி, மிரட்டி, கயிற்றில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்து, இன்னும் இன்னும் நிறைய அவனைக் கொண்டாடியிருக்கிறாள் !

பாவம் ! தேவகி!

கண்ணனின் விளையாடல்களைப் பக்கத்தில் இருந்து அனுபவித்தவளில்லை!

தேவகியின் மணிவயிற்றில் உதித்த பிள்ளையல்லவா?

பெரியாழ்வார் சொல்கிறார் "தேவகி சிறுவன் ...."

இன்னும் சொல்கிறார் 'தேவர்கள் சிங்கம்"

ஆம். நரசிம்மமாய் அவதரித்து, இரண்யனைக் கொன்று, பிரஹ்லாதனுக்கு அருளிய
"நரசிங்கமல்லவா அவன்!

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போவதில் மனம் திருப்தி அடையவில்லையாம்!

"நம் பரமன்" அப்பாடா!

இப்பொழுது பெரியாழ்வாருக்கு உவகைப் பெருகுகிறது!

ஆமாம்...கண்ணனின் குழலூதும் அழகைப் பருக வந்துவிட்டு, அவனழகில் உருகி நின்றால் எப்படி?

வாருங்கள்! பெரியாழ்வார் கூறுகிறார்! கேட்போம்:

கண்ணனின் குழலிசைக் கேட்டவரெல்லாம் தவித்தனர்!

அமுத மய கீதமென்னும் கீத வலையில் சிக்குண்டு, வானவெளியில் இயங்கும்
கந்தர்வர்கள், மயங்கி நிலைகுலைந்தனராம்!

கந்தருவர் என்ன? நாமும் அந்த குழலிசை மயக்கத்தில் இருக்கிறோம்!

பெரியாழ்வார் திருமொழி.
====================

கண்ணன் வேய்ங்குழலூதற் சிறப்பு.

செம்பெருந் தடங்கண் ணன் திரள் தோளன்
..தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன் இந் நாள்குழ லூதக்
...கேட்ட வர்கள் இடருற் ரன கேளீர்
அம்பரந் திரியும் காந்தப் பரெல்லாம்
...அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி
...நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே.

No comments: