Wednesday 17 September, 2008

இசை கடல் !

இசை ஒரு கடல்!

அதை அளவிட முடியுமா? காற்றாய், ஒலியாய், வானாய், ஊனில், உயிரில், உள்ளில் நிறைஞ்சிருக்கு!

"இந்த இசையை அனுபவித்து மகிழ்!" என்று இறைவன் மனிதர்களைப் படைத்தான்.

இயற்கையும், இசையை உணர்கின்றது என்பதை அறிஞர்கள் ஆய்வில் காண்கின்றனர்!

இன்றையச் சூழலில், இசை, இளைஞர்களின் வாழ்வில் பெரும் பங்கு பெறுகின்றது!

இளைஞர் நிறைந்த உலகமிது!

மேலைநாட்டு இசையானாலும், கீழைநாட்டு இசையானாலும், அதிலும் லயம், உருக்கம், குரல் (அல்லது) வாத்தியங்களின் இனிமை, பொதிந்துள்ள கருத்துச் செறிவு Iவையனைத்தும்
இளைஞர்களைக் கவர்கின்றன!

இசை மனிதரை புதுப்பிக்கின்றது!

இசை புத்துணர்வு அளிக்கின்றது!

சென்ற ஐம்பதுகளில், சினிமாப் பாடல்கள்....

ஜி. ராமநாதன், கே. வி. மஹாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற இசை அமைப்பாளர்களின் உயர்ந்த இசை அமைப்பு மக்களைக் கட்டிப் போட்டது!

இளையராஜா இசையமைப்பு ஒரு வரமாகத் தொடர்கிறது!

என் பெண், மருமகன், பிள்ளைகள், அதிலும் பெரியமகன் (CSR) இளையராஜாவின் பாடலுக்குத் தீவிர ரசிகன்.

கங்கை அமரன் பாடல் எழுதுவதிலும், இசையமைப்பிலும் சிறந்திருந்தார். அவர் பாடல்கள்
சிறுபொன்மணி அசையும்! பூந்தென்றல் காற்றே! வா! இன்றைக்கு யேனிந்த ஆனந்தமோ?

ஏஆர்ரெஹ்மானின் இசையை எல்லோரும் நன்கு ரசிப்போம்!
மார்கழிப் பூவே!, தென்கிழக்குச் சீமையிலே! முன்பே வா! என் அன்பே வா! மலர்களே! மலர்களே! இது என்ன கனவா? விண்ணோடும் மீனாய், கண்ணோடும் மானாய்...

இன்னும் வித்யாசாகர், ஹாரிஸ், பரத்வாஜ், யுவன், தேவா அவரின் வாரிசு ஸ்ரீகாந்த் என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம்!

இசை கடல் முழங்கி கொண்டே இருக்கும்!

Friday 5 September, 2008

இசை எண்ணங்கள் !

..
இசை எண்ணங்களை தொடர்கிறேன் !

ரேடியோவில் பாட்டுக் கேட்டு மகிழலாம்!

ரேடியோ, எல்லோரும் வாங்க முடியாது!

யாரோ கொஞ்சம் பேரால் தான் வாங்க முடியும்.

இப்போ நான் சொல்லப் போற நிகழ்ச்சிக்கும், ரேடியோவிற்கும் சம்மந்தம் உண்டு.

என் தம்பி கண்ணனுக்கு (வைத்த பெயர் சிவாம்ருதம். அப்பா மட்டும்தான் அவனை சிவாம்ருதம்!னு கூப்பிடுவார்) 15 வயசிலே ஜுரம் வந்து, நடக்க முடியாமே கால் மடங்கிடுத்து! வலது கையும் பாதிச்சுடுத்து!

பள்ளித் திறந்ததும் 11 வகுப்பு செல்லணும். இப்படி ஆகிவிட்டது! பள்ளி செல்ல முடியாது.

அப்பா அவனுக்குன்னு ஒரு "ரேடியோ" வாங்கினார்!

பாட்டுக் கேட்பான்! கொன்னக்கோல் கொனுப்பிப்பான்!(சொல்லுவான்)

அவனுக்குப் பிடித்த நிகழ்ச்சியைக் கேட்பான்!

விவேகானந்தரின் ராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம்...இப்பிடி எல்லா நூல்களையும் தமிழில் ஆங்கிலத்தில் , கிடைத்ததை விடாது தேடி தேடி படித்தான்

சகோதரிகள் உமா, சுந்தரி பக்கத்து வீட்டு சோமு, இன்னும் நூலகரும் பரிவுடன் கொடுத்து உதவுவார்!

அவ்விதமே இராமகிருஷ்ணர், அன்னை சாரதா, குரு பாயிக்கள் இவர்களை அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் படித்தான்.

சில கீர்த்தைனகள் இராமகிருஷ்ணர் மீது செய்து, ராகம், தாளம் இவற்றோடு பாடுவான்.

அப்படியே தன்னை வளர்த்திக் கொண்டான்.

இன்னொரு சமயம் சிவாம்ருதத்தைப் பற்றி சொல்கிறேன்.

ரேடியோ, கண்ணனுக்காக வாங்கினது ...

"நேஷனல் எக்கோ" ரேடியோவின் பெயர்!

நாங்களும் கேட்டு மகிழ முடிஞ்சது!

ரேடியோ சிலோன்....மறக்க முடியுமா?

நாடகங்கள், சொற்பொழிவுகள், சங்கீதம், பள்ளி மாணவர்க்கான நிகழ்ச்சிகள் போன்ற பல விதங்களில் கருத்துக்கும், செவிக்கும் இனிமை அளிக்கக் கூடிய சேவையை "வானொலி" என்னும் ரேடியோ மக்களுக்குக் கொடுத்தது.

இன்னும் பழைய நினைவுகளில், பி.ஏ.பெரியநாயகி யின் பாடல்கள்!

ஞான சௌந்தரியில் பெரியநாயகியின் பாடல்கள் அவ்வளவு இனிமையாக உருக்கமாக இருக்கும்!

கண்ணன் மேல் பாடிய ஒரு பாடல் "காதலாகினேன்!" என்ற பாடல் நினைவில் இனிக்கிறது!

தமிழ் இசைப்பாடல்கள்...எல்லொரும் கேட்டு மகிழலாம்!

கோபால கிருஷ்ண பாரதியார், கவி குஞ்சர தாஸர், ஊத்துக்காடு வேங்கட கவி, வேத நாயகம் பிள்ளை, பாபனாசம் சிவன், சுத்தானந்த பாரதி, பெரியசாமித் தூரன் போன்றோர்

தமிழ் இசைப் பாக்கள் சிறந்த பாடகர்களால் பாடப் படுகின்றன.

பாரதியாரின் பாடல்கள், இசையோடு கேட்டு மகிழ்கிறோமே!

திருப்புகழ், தேவாரம், திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல், இவைகளும் இசையோடுப் பாடப் படுகின்றன.

சிலப்பதிகாரப் பாடல்கள் இசையில் ஒலிக்கின்றன.

கர்னாடக சங்கீதம் சிறந்த வித்துவான்களால் இன்றளவும் போற்றப் பட்டு, பாடப் படுகின்றன.

இசையைக் கேட்டு அனுபவிப்பதற்கென்றே விழைகின்ற மக்கள் நிறைய இருக்கின்றனர்.

நாதோபாசனை, கீதோபாசனை இவை மாந்தரை, அவர்தம் உள்ளத்தை உயர்த்துகின்றது!

உன்னத கிருதிகள் இயற்றி மாந்தரை உய்விப்பதற்காக படைத்தளித்த மகான்களை என்னவென்று புகழ்வோம்!

மும் மூர்த்திகள், புரந்தர தாஸர் போன்ற ஆன்றோர் இறை கருணையில் நனைந்து, அருளிச் செய்த கிருதிகள் எக்காலத்தும் உயிர்களை வாழ்விக்கும் அமுதாகும்!

இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் சங்கீதத் துறையில் வல்லுநர்களாக விளங்குகின்றனர்!

புஷ்பவனம் குப்புசாமி தம்பதியர் நாட்டுப் புறப் பாடல்களில் கர்நாடக ராகங்களை அமைத்து மிக அழகாகப் பாடுகின்றனர்!

கர்நாடக இசைத் துறையில் இன்று திகழ்ந்து விளங்குகின்ற பல இளைய இசை மேதைகள் நமக்குக் கிடைத்தப் பொக்கிஷம்!

Monday 1 September, 2008

இசையில் இசையும் எல்லாம்!

இசைக்கு மயங்காத உயிர்கள் உண்டோ?

நினைவு தெரிஞ்ச நாளாய் பாட்டுன்னா கேட்கப் பிடிக்கும்.
யாருக்குத்தான் பிடிக்காது?

இருந்தாலும் சொல்லிக் கொள்ளத் தோணுது!

பக்கத்திலே கலியாணம் ஆன ஒரு இல்லத்திலே, வீட்டுக் கூடத்திலே, பொண்ணு, சில சொந்தக்காரப் பெண்கள்.

இவர்கள் பட்டுப் பாயிலே (புதுப் பாயை அப்படி சொல்வது வழக்கம்) அமர்ந்து நோட்டுப் புத்தகத்தில் பாடல்களைப் பாடிப் பார்க்கின்றனர்.

கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது!

என்கண்ணுக்கு தேவதைகளாய் தெரிந்தனர்!

அந்தப் பாடல்கள்:

ஜங்கார சுதி செய்குவாய்! ஜீவ வீணையில்
சங்கீதாம்ருதம் பெய்குவாய்! ஜகதீஸ்வரனே!


என்ற பாடலும்,

கருணாலய நிதியே!தினமும் உன்சரணாம்புஜம் கதியே!

என்ற பாடலும் கேட்டேன்!

(மாலையில் ஊரழைத்து, பொண்ணு மாப்பிள்ளையை மணையில் அமர்த்தி, எல்லோரும் பாடி , பொண்ணையும் பாடச் சொல்லி, பின்பு குத்துவிளக்கேற்றி, சுற்றி வர பெண்கள் கும்மி அடித்து, ஆரத்தி எடுத்து மகிழ்வர்!)

1950-ஆரம்பத்தில், காற்றுவாக்கில் வரும் பாடல்களையே கேட்கலாம்!

மைக்கிலே, டூரிங் கொட்டகையிலே, இம்மாதிரிதான் பாட்டுக் கேட்டு ரசிக்க முடிந்தது!

சினிமாப் பாடல்கள் நல்லக் கருத்துகள் நிறைந்தும், எழுச்சி ஊட்டக் கூடியதுமாக அமைந்திருக்கும்.

கிராமியமாகவும், கர்நாடக இசையாகவும் ஒலிக்கும்!

(தொடர்கிறது)