Sunday 29 November, 2009

வீடு ! - 2

வீடு !

நான் வளர்ந்து வாழ்ந்த வீடு!

வாழ்க்கைப்பட்டுப் போன..... வாழ்க்கைப் பட்டுப் போன பின்னும் பிஞ்சும், குஞ்சுமா
மூணுப் பிள்ளைகளோட கணவனை இழந்து வந்த போது தஞ்சம் தந்ததும் இந்த வீடுதான்!

என் மக்கள் வளர்ந்ததும் இந்த வீட்டில் தான்!

பெற்றோர், சகோதர, சகோதரிகளும் அனுசரணையாக இருந்தார்கள்.

தாழ்வாரத்தின் ஓரத்தில், எந்திரக்கல் மாவு அரைத்தல், ரவை உடைத்தல் போன்றவற்றிற்கு உபயோகிப்போம்.

பருப்பு உடைக்க ஒருவிதமான இயந்திரக் கல்லுண்டு. கல்லின் மேல்பகுதி லேசாக இருக்கும்.

முற்றத்தில், இரவில் நிலா பார்க்கலாம்.

நிலாச்சோறு, அம்மா கையில் போட, நாங்க சாப்பிட்டு இருக்கோம்!

பகல் வெய்யிலில், விறகு போன்றவற்றைக் காயப் போடுவோம்!

இதென்ன புதுமையா? ன்னு கேக்கலாம்!

இன்னிக்கு திறந்த வெளிக் காற்று வீட்டினில் கிடைப்பது அரிது!

பொட்டியாட்டம் வீட்டுக்குள்ளே, மின்விசிறி தான் காத்து கொடுக்கும்!

நாங்க அண்ணன், தம்பி, தங்கைகள் எட்டு பேரு.

சித்தப்பா, பெரியப்பா மக்கள் எல்லாம் விசேஷங்களில் கூடுவோம்!

வீடே திமிலோகப் படும்!

எல்லாம் உண்டு! சண்டையா? பேச்சு வார்த்தையா எல்லாம் உண்டு! மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் உண்டு!

புழக்கடையில், ஈரக் கடலைக்காயை (மல்லாக்கொட்டை? நிலக்கடலை?)

மண்தரையில் கொட்டி பரவலாக்கி, அதன்மேலே நல்லாக் காஞ்ச தென்ன ஓலையைப் போட்டு
நெருப்புப் பத்த வெச்சு எரியும்!

அப்போ சுற்றிலும் அண்ணன் தம்பிகள், அமர்ந்து கொண்டு குச்சியால் கிளறி விடுவார்கள்.

இப்போ, கடலை நல்லா வறுபட்டிருக்கும்! சிறிது நேரத்தில், எல்லாக் கடலையையும் பொறுக்கி ஒண்ணு சேத்தணும்! அவரவர் அங்கேயே கடலையை சாப்பிடுவார்கள்!

காலேஜ் விஷயம், ஹிந்தி, இங்கிலீஷ் சினிமா, இதைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்!

இன்னும்வரும்...

No comments: