Saturday 28 November, 2009

வீடு ! - 1

வீடு!

நம்மைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ளும்! நம்முடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும்!

வீடு என்பது சொத்தா? ஜடப் பொருளா? வெறும் கல்லு, மண்ணு, சுண்ணாம்பு.... இவைகளைக் கொண்டுக் கட்டப்பட்ட கட்டடம் மட்டும் தானா?

இல்லை! இல்லை! நம்மோடு வாழ்ந்து வரும் உயிர்ப் படைப்பு!

எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு மட்டுமன்று! நம்முடன் துணை இருக்கும் உயர்படைப்பு!

மக்களின் இன்ப, துன்ப, கோப, தாப, சிரிப்பு, அழுகை, வறுமை, செல்வம், காதல், உறவு, பிரிவு போன்ற அத்தனையும் வீடு அறியும்!

வாசல் முத்தம்!

முன்றில்! பெருக்கி சாணம் தெளித்து, அழகழகாய் புள்ளிக் கோலங்களும், கோடு கோலங்களும் நிறைந்து விளங்கும்!

வாசல் திண்ணைகள்!

இரண்டு திண்ணைகள்! வீட்டுப் பாடம் படித்து எழுதுவோம்! கதைகள் பேசி மகிழ்வோம்!

மழை நாட்களில், கயற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்போம்!

சந்தடி சாக்கில் மழையில் இறங்கி ஆடுவோம்! கப்பல் விட்டு விளையாடுவோம்!

திண்ணைகளுக்கிடையே ஏழு படிகட்டுகள்!

வாசலின் சிறிய திண்ணையில் ஒரு சின்ன உள் உண்டு! அது 'காந்தி சிறுவர் சங்கம்' அலுவலகம்! தம்பி, தங்கைகள் அவர்கள் நண்பர்களுடன் சிறப்பாக நடத்திய சிறுவர் சங்கம்!

ரேழியும்,ரேழித் திண்ணையும் !

ரேழித் திண்ணையில் பிரசவங்களும் நடந்திருக்கின்றன!

மற்றபடி குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவார்கள்! இங்கும் படிக்கலாம்!

நெல்லுக் கொட்டிவைக்கும் 'தொம்பை' ரேழியிலும், வீட்டின் அறையிலும் உண்டு!

தாழ்வாரமும்,கூடமும்,தொட்டி முத்தமும்!

ஓடியாடி விளையாடத் தோதான இடம்.

எல்லா உள்ளேயும் (உள்=அறை) ஒளிந்து விளையாடலாம்!

குழந்தைகளின் விளையாட்டுத் தொல்லைகளுக்கு பொறுமை காக்கும் பெரியோரும் உண்டு, கோபத்துடன் கத்தி பொறுமை இழக்கும் பெரியவர்களும் உண்டு!

இந்த கொடுவாள்,அரிவாள் போன்றவை வைத்து இடம் தாழ்வாரத்தின் மேல் கூரையில் இருக்கும்

'எரவாணம்' (இறவாணம்?) மரத்தில் ஆனது.

கூடம் என்பது (பட்டாசாலை?) வீட்டின் சகலவித நல்லவைக்கும், குழந்தைகள் அப்தபூர்த்தி, கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, மணமான தம்பதியரை மணையில் அமர்த்தி, பாட்டுப் பாடி, வாழ்த்தி, ஆரத்தி எடுத்துக் கும்மி அடித்து மகிழ்வதும் கூடத்தில்தான்!

சோக நிகழ்வான திவசம் செய்தல்(சிரார்த்தம் செய்தல்) கூடத்தில் தான்!

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் இந்தக் கூடத்தில்தான்!

அப்பா மதிய உணவருந்திய பின்பு, பாய் விரித்து தலைக்கு ஒரு பலகையைச் சாய்வாக வைத்துக் கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவார்!

வெய்யில் தாழ்வாரம் கொறட்டுக் கல்லைத் தாண்டினால் மதியம் மணி இரண்டிற்கு மேல் ஆகிறது என்று பொருள்!

இன்னும் வரும்.....

No comments: