Friday 15 January, 2010

பொங்கலோ பொங்கல்!

மண்ணுக்கும், விண்ணிருந்து புவி காக்கும் சூரியனுக்கும், உழைக்கும் மாடுகளுக்கும், உயர்வான உழவுக்கும், பயிர் வளர்த்து உயிர் அளிக்கும் உழவர் பெருமக்களுக்கும் நன்றி சொல்லிப் பணியும் விழாதான் இப்பொங்கல் திருவிழா!

பொங்கல் நாளில், புது மண் அடுப்பில் ஏற்றிய புத்தம்புதுக் கோலப் பானையில், கட்டியக் கொத்து மஞ்சளுடன், புத்தரிசி, பாகு வெல்லம், ஏலம் மணக்க, புத்துருக்கு நெய்யூற்றி, கட்டுக் கரும்பும், பக்கத்தில் சாத்தி வைத்து, மனமெல்லாம் மணக்க,வாழ்வெல்லாம் மணக்க ஏழையர் வாழ்வினிக்க இறைவனருள் வேண்டியே "பொங்குக பொங்கல்! பொங்கலோ பொங்கல்" என்று கூடியேக் கூவிடுவோம்!

விவசாயத்தில் பெண்களின் நிலை கூறி, அவர்களின் உயர்வு கூறும் 'கோடுகளும், கோலங்களும்' என்னும் நாவலை அளித்த, திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி!

பெண்ணுயர்வுக்குத் தலை வணங்குவோம்!

பள்ளி நாட்கள், சிறு வயதினில், கும்மிப் பாடல் ஒன்று...

அப்போது அதன்பொருள் விளங்காமலே பாடிக் கும்மிக் கொட்டியிருக்கேன்!

அந்தப் பாடல் அருமையான படல்! ஒரு சிறிதே நினைவில் இருக்கிறது!

'அறிகுவமே! அறிகுவமே!
அமுதின் சரிதமிதை அறிகுவமே!

நிலம் உழுது நன்றாய் நீர்ப் பாய்ச்சி
பறம்படித்து நன்றாய் பண்படுத்தி
பலவித நெல்மணிகளைத் தெளிக்க'


............. (மறந்து விட்டது)


பொங்கல் நாளில் மனிதம் மலிந்து, தீவிரம் மறைந்துவிடக் கோருவோம்!

அன்பே தெய்வம்! அன்பே செய்வோம்!

No comments: