Tuesday 2 March, 2010

கண்ணன் குழல் அமுதம்-- 2.

கண்ணன் வேய்ங்குழல் ஊதற்சிறப்பு!
=================================

கண்ணனின் குழலிசை அமுதப் பிரவாகமாய் வழிகிறது!

உயிரினங்கள் எல்லாம் அந்த இசையில் கட்டுண்டு எப்படியெல்லாம் காட்சி அளிக்கின்றன!

பறவைகள் தன் கூடுதுறந்து தரையின்மீது கிடக்கின்றன ! கறவைகள் கால்பரப்பி, தலை தாழ்ந்து செவியாட்டாமல் அப்படியே நிற்கின்றன!

மருண்டமான்கள் மேய்தலை மறந்து,வாயிலுள்ள புல் கடைவாய் வழியாய் வெளியே நழுவும்படியாகத் தன்னை மறந்து, இருக்கும் நிலை, வரைந்த ஓவியங்களாய் அசையாதச் சித்திரங்களாய்க் காண்கின்றன!

என்னென்பது குழல்வழி அமுதகீதம்! யாதவக்கண்ணனின் கருணைநிறைந்த லீலையன்றோ?

குழலிசையில் உயிரினங்கள் எல்லாம் தன்நிலை மறந்து இருக்கும்போது மனிதராகிய நாம் எம்மாத்திரம்?

வண்டினம் சூழ்ந்த தாமரை போல சுருண்டுருண்ட குழல் சூழ்ந்த முகமலரோன், முகில்வண்ணன் சிறு வியர்வைத் துளிர்க்கும்படியான புருவங்கள் கூட, சிவந்த கண்கள் செருக
குழலின் துளைகளைச் சிறுவிரல்களால் தடவி குழலூதும் போது, குவியும் செவ்விதழின் அழகு போன்ற அற்புதக் காட்சிகளும், உயிரினங்களின் தன்னை மறந்த நிலைகளும் எழுதியச் சித்திரமாய்ப் படைத்து நமக்கு அளித்த பெரியாழ்வார் அனுபவித்ததை நமக்குப் பாடல்களாக
அளித்து அருளிச்செய்துள்ளார்!

நாம் இப்பாடல்களைப் படித்து உணர்ந்து, அனுபவித்து உய்வோமாக!

பாடல்கள் இதோ:

சிறுவிரல் கள் தடவிப் பறிமாறச்
..செங்கண் கோடச் செய்ய வாய்க்கொப் பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக்
..கோவிந்தன் குழல் கொடூதி யபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
..வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்ப ரப்பிட்டுக்
..கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே!

திரண்டெ ழுதழை மழைமுகில் வண்னன்
..செங்க மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்
..ஊது கின்ற குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து
..மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
..எழுதுசித் திரங்கள் போல நின்றனவே !

No comments: