Thursday 2 July, 2009

பிள்ளைச் செல்வமே!

அன்னை மனம் குழந்தையைக் கண்டால் பாகாய் உருகும்! பித்தாய் அலையும்!

மழலையின் ஒவ்வொரு அசைவிலும் களிகொள்ளும்!

பாரதி சொன்னானே!

"என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா!

பேசும் பொற்சித்திரமே!...
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி!..."


நாட்டுப்புறப் பாடல்களும், இலக்கியப் பாடல்களும் பிள்ளைச் செல்வத்தின் உயர்வை அழகாக, அருமையாகச் சொல்லுகின்றன!

பிள்ளைத் தமிழில்,செங்கீரைப் பருவம் முதலாகப் பத்துப் பருவங்களில்
கடவுளர்களை குழந்தையாகக் கொண்டு, அமைத்தப் பாடல்கள்
நாம் அனுபவித்துப் படித்துணர வேண்டியவையாகும்.

திரைப் படப் பாடல்களிலும் அழகும், பாசமும், நயமும்
பொங்க அன்னையின் சீராட்டும், பாராட்டும் நிறைய உண்டு!

ஒரு அன்னையின் பாட்டு! தாய்மையின் தவிப்பிலே பாடுகிறாள்! கேளுங்கள்!

'வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவம் இருந்து
தேடிய நாள்தன்னில் செல்வமாய் வந்தவளே!
..........
அழுதா அரும்புதிரும்!அண்ணாந்தா பொன்னுதிரும்!
சிரிச்சா முத்துதிரும்!வாய்திறந்தா தேன்சிதறும்!'


அடுத்து அன்னையின் பொறுப்பு வாய்ந்த தன் கடமையைச் சொல்லுகிறாள்!

பிள்ளையை பெற்றுவிட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?'


இன்று, தொட்டில் குழந்தைகள் உருவாகும் நிலை கண்டு, நெஞ்சம் குமுறுகின்றது!

இந்நிலை இனித் தொடராமல் இருக்க இறையருளை வேண்டுவோம்!

நம் பெரியோர்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் பாட்டு சொல்வர்!

இரண்டு கைகளையும் கொட்டி, கொட்டி ஆடும் போது கைகளைக் குவித்து தலைக்கு மேல் தூக்கும்! அதற்கு ஒரு பாடல்!

'ராமா கிருஷ்ணா கோவிந்தா
கிருஷ்ணா ராமா கோவிந்தா

வெங்கட ரமணா கோவிந்தா
சங்கட ஹரணா கோவிந்தா

அப்பரமேயா கோவிந்தா
சுப்பிரசன்னா கோவிந்தா

வட்டிக்காசு வாங்கும் வடமலையப்பனுக்குக்
குட்டி கோவிந்தா!'


குழந்தை ஐந்து, ஆறு மாதங்களில் காலில் தண்டை கொலுசு சப்திக்க,
ஜிங்கு ஜிங்கு என்று மகிழ்ச்சியுடன் குதிக்கும்! அதற்கு ஒரு பாடல்!

சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!

கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!

கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!


தவழ முயலும்போது ஒரு பாடல்!

ஆனை ஆனை! அழகரானை!
ஆனயும் குட்டியும் ஆடுமானை!

ஜல்லைக் கரும்பை முறிக்கும் ஆனை!
சீராடி சீராடிக் கொஞ்சும் ஆனை!

குட்டி ஆனைக்குக் கொம்பு முளச்சுதாம்!
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்!


இன்னும்,

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!


ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாங்களேத் தங்களைத் தாயாக பாவித்து "வாத்ஸல்யம்" பெருகப் பாடியருளியது நாம் செய்த பாக்கியம்!

பெரியாழ்வார் திருமொழி
======================
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறங்கட்டி
தன்னியல் ஓசை சலன்சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக் கோட்டரா அச்சோவச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோவே!


குழந்தை கண்ணனை, வெண்ணையுண்ட வாயனை, மண்ணளந்த மாலோனை ஆழ்வார் அழைக்கிறார்!

ஓடி வந்து தன்னை அணைத்துக் கொள்ள வேண்டுகிறார்!

என்ன அழகு பாருங்கள்!

3 comments:

Several tips said...

மிகவும் நன்று

Thangamani said...

உங்கள் பாராட்டுக்கு என் மனமுவந்த நன்றி!
அன்புடன்,
தங்கமணி.

Indra Srinivasan said...

மிகவும் அருமை. மிக்க நன்றி. அற்புதமான விளக்கங்கள்.