Thursday 3 December, 2009

கண்ணன் என் தம்பி! - 1

சின்ன வயதில் கண்ணன் வீடே தங்க மாட்டான்!

விளையாட்டுத்தான் அவனுக்கு எப்போதும்!

அவனுடன், ராஜுவும் (எங்கள் சித்தப்பா மகன்) சேர்ந்தால் கொண்டாட்டம்தான்! ரெண்டு பேரும் ஏறக்குறைய ஒரே வயதினர்!

கோவிலில் திருவிழா என்றால், இவர்கள் அங்கே வேடிக்கைப் பார்க்கச் சென்று விடுவார்கள்!

மாரியம்மன் மஹமேருவில் (புஷ்பப் பல்லக்கில்) ஊர்வலம்! அதுக்கு பூக்களெல்லாம் அலங்கரிக்கிப்பதைப் பார்ப்பது ஒரு வேடிக்கை!

வேலை செய்யும் கலைஞர்களுக்கு ஏதாவது சின்ன உதவிகள் செய்வார்கள்!

இரவு வீட்டிற்கு வரும்போது பயத்தோடு வீட்டினுள் நுழைவார்கள். ஏனென்றால்,அப்பா கோவத்தோட கத்துவார்! படிக்காம, சாப்பிடாமே ஊர் சுத்துகிறார்களே என்று அக்கறை!

கண்ணன் ரொம்பக் கோவக்காரன்! அவன் கேட்டது கிடைக்கலேன்னா ஒரே ரகளைதான்!

அடிக்கடி கால்வலின்னு சொல்வான்!

அப்பா மேலே கால் போட்டுண்டு படுத்துப்பான்! அப்பா அவன் காலைப் பிடித்து விடுவார்!

படிப்பில் சூடிகையா இருந்தான்!

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, பத்தாம் வகுப்பு முழு பரீட்சை முடிஞ்சு...லீவு! நீண்ட விடுமுறை!

இன்னொன்று சொல்ல மறந்தேனே!

அவனுக்கு ஏசிசி யில்சேர ஆர்வம்!(என்.சி.சி மாதிரி)

அதுக்கு காக்கி சீருடை, ஷூ,தொப்பி எல்லாம் வாங்கணும்!
அப்பா காசு கஷ்டம்! முடியாதுங்கறார்!

ரெண்டாவது அண்ணாகிட்ட கேட்டு வெச்சிருக்கான். அவரும் சரீன்னுட்டார்! வாங்கி கொடுத்தாரே! ஆசையோடு தொப்பியைப் போட்டுப் பார்த்து மகிழ்ந்தானே!

ஆனா விதியோட விளையாட்டை என்னன்னு சொல்றது?

கடுமையானக் காய்ச்சல்! நாலு நாளா வாட்டறது!

உடம்பை அசைச்சால் வலீன்னு கத்தறான்! இன்ச் கூட நகர முடியலை!

டாக்டர் வீட்டுக்கே வந்து பார்த்தார்! காய்ச்சல் கொறஞ்சிது!

ஆனா நேரா நடக்க முடியல்லே! ஒரு கோல்(தடி)பிடித்து நடக்க முயன்றான்.

அந்த சமயம் என் கல்யாணம்! வீட்டிலேயே! (திருமண மண்டபம்கிடையாது)

இந்த நிலையில்,நான் புகுந்த வீடு சென்றேன்!

என் அம்மாவும், தங்கைகள் ரெண்டுபேரும், அவனைக் கவனித்துக் கொண்டனர்!

கண்ணனுக்கு சுத்தமா நடையே வரவில்லை!

கால்கள் இரண்டும் முடக்கி விட்டது!

படுக்கும் போது கூட,கால்கள் முடங்கியே தான் இருக்கும்!

கால்களை நீட்ட முடியாது! கைகளில் வலது கை டனா அளவுக்கு வரும்.

"வாயோடு குந்தாணி" தெரியும்தானே?

அதுதான் அவனுக்கு நகர்ந்து செல்ல உதவியாக இருந்தது!
அதை வலது கையால் உருட்டிண்டு வருவான்! மற்ற எல்லா வேலையும் இடது கையில்தான்!

அவன் எழுந்து உருளையை உருட்டிண்டு, தொட்டி முத்தத்திலே, பல் தேய்ச்சுண்டு, காலைக் கடன் எல்லாம் முடிச்சிப்பான்!

அம்மா கவனிச்சுப்பார். சகோதரிகளும் கவனித்துக் கொள்வர்.

அவனுக்காக வீட்டில்'ரேடியோ'வாங்கினார்கள். அப்போ வானொலி சஞ்சிகை மாதா மாதம் வெளிவரும். அதில்,பாடல் பயிற்சியில் பாட்டும், ச்வரமும், ராகமும் எழுதி யிருக்கும்!

தாளம் "அரை எடுப்புத் தள்ளி" ந்னு இருக்கும். சரியாப் பாடிடுவான்!

தாளங்களை ரசிச்சுக் கேப்பான்!

கச்சேரிப் பாடல் நடக்கும் போது, அதுக்கு சரியாக் கொன்னக் கோல் சொல்லுவான்!

இன்னும் வரும்....

No comments: