Saturday 5 December, 2009

கண்ணன் என் தம்பி! -- 3

சேலம் ராமகிருஷ்ண மடத்தையும், மடத்துச் சான்றோர்களையும் காண மிகவும் ஆவலாக இருந்தான்!

கண்ணனின் எண்ணம் நிறைவேறியதா?

ராஜு! எங்கள் (சித்தப்பா மகன்) தம்பி வந்தான். சேலம் செல்ல ஏற்பாடு செய்தான்!

ஒரு வேனில், கண்ணனை சிலர் (கை உருளையோடு) ஏற்றினார்கள். ராஜு கண்ணனுடன் சென்று அவனுக்கு உதவியாக இருந்தான்!

கண்ணன் மனம் மகிழ அங்குள்ளப் பெரியோரைச் சந்தித்தது, அங்கு நடந்த பூஜையில் கலந்துகொண்டது(எல்லாம் உருளையுடன் நகர்ந்து...நகர்ந்தே..)

இன்னும் சொல்லியிருப்பான்! எனக்கு நினைவில்லை!

இப்படியே ஒன்பது வருடங்கள் உருண்டது! உடல் நலமின்றி, ஆகாரம் செல்லவில்லை!

டாக்டரும் வந்தார்! மருந்துகள் கொடுத்தார்! ஒன்றும் பலனில்லை!

மூச்சுத் திணறல் வந்தது!

அக்கம் பக்கம் சொந்தக்காரர்கள் வந்து பார்த்துச் சென்றனர்!

இதற்குள் ராஜு, சேலம் மடத்திலிருந்து பிரசாதம் வாங்கி வந்தான்!

மூன்றாவது அண்ணாவின் மடியிலேயே... இரவு சென்றது...

மூச்சுத் திணறல்....

பக்கத்து வீட்டுப் பெரியப்பா சொல்கிறார்: 'நாங்கள்ளாம் அஞ்ஞானிகள்! நீ ஞானஸ்தன்! ஒனக்கு சொல்றதுக்கு என்னப்பா இருக்கு! நாராயணா ங்கற நாமத்தை கெட்டியாப் பிடிச்சுக்கோ!'

கண்ணன் சந்நியாஸம் வாங்கிண்டான்!

தபால் மூலமாக...(விவரம் சொல்லலை) குரு பாயின் புனித காவி வஸ்திரத் துளி(பிட்)

அதை மூச்சுக்குக்கும், இதயத்துக்கும் வைத்துக் கொண்டான்.

அதுவும் முடியலை! மூச்சு வாங்கறது!

விரல்கள் ஜப மாலையை தேடுவதுபோல் தோன்றியது!

ராமகிருஷ்ணர் படத்தை அவன் கண் முன்னாலே காட்டிண்டு, 'ஓம் ராமகிருஷ்ணா! ஓம் ராமகிருஷ்ணா!' ந்னு நான் பலமா சொல்ரேன்!

பக்கத்து வீட்டு சந்துரு அண்ணா அப்படியே கரம் கூப்பிண்டிருக்கின்றார்!

கண்ணன் விடுதலைப் பெற்று விட்டான்!

ராமகிருஷ்ணர் பதம் சேர்ந்தான்!

அப்போது அவனுக்குவயது இருபத்தியேழு!

நிறைவுற்றது.



--------------------------------------------------

கண்ணன்(சிவாம்ருதம்) தமிழில் கவிதைகளும், கீர்த்தனைகளும் இயற்றியுள்ளான்.

அவற்றிலிருந்து...

கீர்த்தனை--- 1
====================

ராகம் திலங். தாளம் ஆதி.

பல்லவி
=======

நம்பினேன் அருள்செய் நாயகனே!உன்பால்
நாளும் பக்திஓங்க நீளும் பிறவி நீங்க(நம்பி)

அனுபல்லவி
==========

அம்பிகை ஸ்ரிபவ தாரிணி பாலா!
அன்னை சாரதையின் ஆருயிர் மணவாளா!(நம்பி)

சரணம்
======

வஞ்சப் புலனைந்தைக் கொஞ்சமும் நம்பிடேன்!
..வந்த உலகை எந்தன் சொந்தமாய் நம்பிடேன்!
தஞ்சமென் ருன்மலர்த் தாளையே நம்பினேன்!
..தாமதம் செய்யாதே! ராமக்ருஷ்ண தேவாஉனை(நம்பி)
--------------

கீர்த்தனை--- 2
====================

ராகம் சரஸ்வதி தாளம் ரூபகம்.

பல்லவி
========

பகவானைப் பணி மனமே!
பரமஹம்ஸ ராமகிருஷ்ண (பக)

அனுபல்லவி
===========

சுகவாழ் வுற்றிடவே சத்
..சிதானந்த ஸ்வரூபனை (பக)

சரணம்
========

தூய அன்னை நேயனைஅன்பர்த்
..துயர் நீக்கும்ச காயனை
மாயனை குரு மஹராஜனை
..மஹாதேவ கதாதரனை (பக)
-------------


பகவான் ராமகிருஷ்ணருக்கு, மலர்களால் அருச்சனை!
---------------------------------------------------

வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!

தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!

----------------

No comments: