Sunday 2 November, 2008

பாத்திரங்கள்

அந்த நாட்களில்....

வீடுகளில் நாம் சமைக்க, உணவுக் கெடாமலிருக்க, எத்தகைய சாதனங்களை, கருவிகளை உபயோகித்தோம்?

50 களின் ஆரம்பத்திலும், அதற்கு முன்பும் எனக்குத் தெரிந்தவரை கற்சட்டிகள், உலோக பாத்திரங்கள், வெண்கல பாத்திரங்கள் உபயோகப் படுத்தப் பட்டன.

மண்சட்டிகளும் உபயோகத்தில் இருந்தன.

கற்சட்டிகளில் உயரமானது,அகலமானது, எனப் பல விதங்களில் உள்ளன.

மடக்கு என்று சொல்லப்படும் வடிவிலும் கற்சட்டி அமைந்திருக்கும்.

குழம்பு, ரசம், கூட்டு முதலியவற்றை கற்சட்டியிலே செய்வார்கள். தயிர் தோயவைக்க கற்சட்டி பயன் பட்டது.

வெண்கல பானை என்னும் உலோக சாதனம் சாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசி உப்புமா போன்ற உணவு வகைகளை செய்யப் பயன்படும்.

வெண்கல உருளிகள், விதவித வடிவுகளில், தட்டை உருளி (சருவம் போன்ற அமைப்பில் இருக்கும்)

கல்யாணி உருளி,(பெயர்க் காரணம் தெரியவில்லை) குண்டு உருளி ... இன்னும் பல...

இந்த உருளி என்பது கனமாக இருக்கும்.

பருப்பு வேக வைத்தல், காய்களை வேக வைத்தல், பாயசங்கள் செய்தல், இன்னும் பால் காய்ச்சுதல் போன்ற வற்றிற்கு மிக உபயோகமாக இருக்கும்.

வெண்கல பேலா என்னும் சாதனம் சுத்தமான வெண்கலத்தில் செய்தவையாகும்.

மீந்த சாதத்தை வெண்கலப் பேலாவில் நீர் ஊற்றி வைத்தால் காலையில் உபயோகிக்கலாம். கெடாது.

பித்தளை பாத்திரங்கள் அடுக்குகள், தூக்குகள், தாம்பாளங்கள், கரண்டிகள் என்று புழக்கத்தில் இருந்தன.

குத்து விளக்குகள், போன்ற பூஜைக்குத் தேவையானவைகளும் பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களில் இருந்தன.

பித்தளை அடுக்கு, தாம்பாளம் போன்றவற்றில் ஈயம் பூசப்பட்டு, விசேஷங்களில் பயன்படுத்தப் பட்டது.

அரைத்தல், இடித்தல் போன்றவைகளுக்கு, கல் உரல்,எந்திரம் மிகவும் பயன்பாடு உடையன.

பருப்பை உடைக்கும் எந்திரம், தானியத்தை மாவாய் பொடிக்கும் எந்திரம் பலவகைகளில் உபயோகிக்கப் பட்டன.

மர உலக்கைகள் (பூண்போட்டது) அவல், தானியங்களை இடிக்கப் பயன் பட்டது.

இரும்பு வாணலி பலகாரம், பட்சணம் செய்ய உபயோகிக்கப் பட்டது.

அலுமினியப் பாத்திரங்கள்..

சமைக்க, உணவுப் பொருளை பாதுகாக்க உபயோகப் ப்பட்டன.
அலுமினியக் கரண்டிகள், குழிக்கரண்டிகள் (முட்டை ஸ்பூன்)
உபயோகமாக இருந்தன.

கல்லு கொத்துதல், ஈயம் பூசுதல், ஓட்டை அடைத்தல் போன்ற தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளர் வாழ்ந்தனர்!

பிறகுதான் எவர்ஸில்வர் பாத்திரங்கள் வர ஆரம்பித்தன!

No comments: